Tuesday, July 13, 2004

பருத்தித்துறைப் பிரதேசப் பொறுப்பாளர் கப்டன் மொறிஸ்

பரதரராஜன்.தியாகராஜா. ஆத்தியடி பருத்தித்துறை



நான் போர்முனையில்

குருதி வெள்ளத்தில் நிற்கிறேன்

மீண்டும் நிட்சயமாகத் திரும்பி வருவேன் - ஆனால்

உங்கள் கனவுகளிலும் நினைவுகளிலும் மட்டுமே...!



என்றான். அவன்தான் மொறிஸ்.



1969 இல் பருத்தித்துறை ஆத்தியடியில் பரதராஜன் ஆக அவதரித்த அவன் பதினைந்து ஆண்டுகள் தன் பெற்றோரின் அரவணைப்பில் வாழ்ந்தான். தனக்கென

வாழும் சுயநல வாழ்வில் அவனுக்கு விருப்பம் ஏற்படவில்லை. மண்ணில் சுதந்திரம் கண்ட பின்பு மனையில் இன்பம் காண்போம் என்றான். அன்றே அன்னை மடியைத் துறந்து போர்க்களம் புகுந்தான். மொறிஸ் ஆனான்.



நான்கு ஆண்டுகள் இயக்கப் பணியில் ஈடுபட்டான். குறுகிய காலப் பகுதியில் அவன் ஆற்றிய சேவைகள் அளப்பரியன.



சிறீலங்கா இவாணுவம் தொண்டமானாற்றில் குடிகொண்டிருந்த காலம் அது. புலிகள் பெருந்தாக்குதல் ஒன்றை இராணுவ முகாம் மீது மேற்கொண்டனர். மொறிஸ் அத்தாக்குதலை முன் நின்று நடாத்தி வெற்றியும் கண்டான். இராணுவ வீரரைச் சிதறியோடச் செய்தான். பூநகரி இராணுவ முகாமைத் தாக்கி வெற்றியும் கண்டு காயமும் பட்டான்.



பருத்தித்துறையில் குடி கொண்டிருந்த இராணுவத்தை வெளியேற விடாமல் சென்ரி போட்டுத் தடுத்து வெளிவந்தோரை விரட்டி அடித்த பெருமை இவனுக்குண்டு.



முதல் முதலாக பருத்தித்துறையில் தம்பசிட்டி வீதியில் வைத்து ஆமி றக்கிற்கு கிரனைட் வீசி ஆமியைக் கிலி கொள்ளச் செய்த துணிவும் இவனுக்குண்டு.



ஆமி குடி கொண்டிருக்கும் இடங்களுக்கெல்லாம் சென்று அவர்கள் இருப்பிடங்களைச் சுற்றி சக்கை தாட்டு விட்டு வருவதில் இவனுக்கு நிகர் இவனே தான். அதனால் இவனை பருத்தித்துறை மக்கள் அன்பாக M.O (Mines operator) என்று அழைப்பார்கள்.



1987 ம் ஆண்டு யூலை 29 இல் இந்திய அமைதிப்படை இலங்கை மண்ணில் கால் வைத்தது. காந்தி பிறந்த தேசத்திலிருந்து அமைதி காக்க என்று சொல்லி வந்த படை ஆக்கிரமிப்புப் படையாகி புலிகளைத் தேடிக் கண்டு பிடித்துக் கொல்லும் பணியில் ஈடுபடத் தொடங்கியது.



தாயக மண் மீட்பே தன் மூச்செனக் கொண்டு வடமராட்சியில் தனக்கென ஒரு

தனி இடம் பிடித்துக் கொண்ட மொறிஸ் மீது ஆக்கிரமிப்புப் படையின் கவனம் காட்டமாக இருந்தது. எப்படியாவது அவனைப் பிடித்து விடவேண்டுமென்ற எண்ணத்துடன் வெறி கொண்ட நாய் போல அவனைத் தேடி அலையத் தொடங்கியது.



மொறிஸோ இந்திய இராணுவத்தின் கண்ணெதிரில் அகப்பட்டும் அவர்கள் பால் தன் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து அவர்கள் துப்பாக்கி வேட்டுக்களுக்குள் தான் அகப்படாது மாயமாய் மறைந்தான். ஐந்து தடவைகள் இந்தியப் படைகள் சுற்றி வளைத்த போதும் அவர்கள் கண்களுக்குள் அகப்படாது தப்பித்துக் கொண்டான். அவன் சாதாரண துப்பாக்கி வேட்டுக்களுக்கெல்லாம் அகப்படுபவன் அல்ல.



ஆறாவது தடவையாக இந்தியப் படையினரால் சுற்றி வளைக்கப் பட்ட போதும் கலங்காது நின்று போராடி வெற்றியும் கண்டான்.



அவனது நேரடி மோதலுக்கு ஈடுகொடுக்க முடியாது பலத்த இழப்புகளோடு தப்பியோடிய இந்தியப் படையினரில் பலர் பதவி இறக்கப்பட்டனர். உலகின் நாலாவது வல்லரசின் இராணுவச் சிப்பாய்கள் மொறிஸ் என்ற நாமம் கேட்டாலே நடுங்கினர். அவன் நாமம் சொன்ன அப்பாவி மக்களை அடித்தும் உதைத்தும் சித்திரவதைப் படுத்தினர். அவன் பெற்றோரை உடன் பிறப்புகளை மைத்துனரை எல்லாம் இராணுவ முகாம் வரை கொண்டு சென்று துன்புறுத்தினர்.



இதனால் மொறிஸின் மனம் வேதனையில் வாடினாலும் தமிழீழத்தின் மீது அவன் வைத்த நம்பிக்கை எள்ளளவேனும் குறையவில்லை. அவனது நம்பிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போயிற்று.



இந்தியப் படையின் தேடுதல் வேட்டைக்கு நடுவிலும் மொறிஸின் பணிகள் தொடர்ந்தன. இயக்க வளர்ச்சியில் அவன் எப்போதும் கண்ணும் கருத்துமாகவே இருந்தான். சாதாரண படை வீரனாகச் சேர்ந்த அவன் கப்டன் பதவிவரை உயர்வு பெற்று மிகமிக ஆபத்தான சூழ்நிலையிலும் மக்கள் மத்தியில் நடமாடி இயக்க வளர்ச்சிக்கு ஆற்றிய சேவைகள் கொஞ்ச நஞ்சமல்ல. எண்ணிலடங்காதவை.

வெற்றிகள் பல ஈட்டி அளப்பரிய சாதனைகள் பல புரிந்து மக்கள் மனதில் அழியாத இடம் பெற்று விட்டான் கப்டன் மொறிஸ்.



நாட்டு மக்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் பாத்திரமானான். தன்சகாக்களை அன்புடன் நேசிப்பதில் அவனுக்கு நிகர் அவனேயானான். இயக்கத்தின் மீதும் இயக்க உறுப்பினர்கள் மீதும் அவன் கொண்டிருந்த மட்டற்ற அன்பையும் விசுவாசத்தையும், போராட்டத்தின் மீது அவன் கொண்டிருந்த தீர்க்கத்தையும் கடைசி நேரம் வரைக்கும் அவன் செய்த செயல்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

பருத்தித்துறை வாழ் மக்கள் அவனை மிகவும் நேசித்தனர். அவனும் மக்களை மிகவும் நேசித்தான்.



ஆனாலும் எட்டப்பர் கூட்டம் தம் காட்டிக் கொடுக்கும் வேலையைச் செய்யத் தவறவில்லை. காட்டிக் கொடுக்கும் எட்டப்பரை இல்லாது ஒழித்து அழிக்க வேண்டுமென அடிக்கடி சொன்னான். சொன்னதை அவன் செயற் படுத்தி முடிக்கும் முன் எட்டப்பர் சூழ்ச்சிக்கு அவனே பலியானான்.



அன்று... 1989 ம் ஆண்டு. மே முதலாம் திகதி. (1.5.89)- அதிகாலை.





மொறிஸ் முதல் நாள் இரவு நீண்ட நேரமாகத் தன் நண்பர்களுடன் சில திட்டங்கள் பற்றிக் கதைத்து விட்டு நேரங்கழித்தே நித்திரைக்குச் சென்றான்.......காலை எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து, குளித்து தன் கடமைக்குத் தயாரானான்.



சாப்பாட்டுக்கு வேறு இடத்துக்குச் செல்ல வேண்டும். அதற்கு முன் இயக்க சம்பந்தமான பரிசோதனை ஒன்று செய்ய வேண்டி இருந்ததால் தனது சகதோழர்கள் ஏழு பேர்களுடன் சேர்ந்து அந்தப் பரிசோதனையில் ஈடுபட்டான்.



அந்த நேரத்தில்தான் அவன் இந்திய அமைதிப்படையினரால் சுற்றி வளைக்கப் படத் தொடங்கியிருந்தான். தான் ஒரு எட்டப்பனால் காட்டிக் கொடுக்கப் பட்டு விட்டேன் என்பதோ, தான் அந்த நேரத்தில் சுற்றி வளைக்கப் பட்டுக் கொண்டிருக்கிறேன் என்பதோ அவனுக்குத் தெரியாது. அவன் அதை அந்த இடத்தில், அந்த நேரத்தில் துளியும் எதிர்பாராது தன் கடமையில் கவனாமாயிருந்தான்.



500க்கும் மேற்பட்ட இந்தியப் படையினர் அவன் இருந்த வீடு இருந்த பகுதியை வரைபடத்துடன் சுற்றி வளைத்திருந்தனர். அவன் மீது நேசமும் பாசமும் கொண்ட பருத்தித்துறை வாழ் மக்கள், அவனுக்கு இந்தத் தகவலைத் தெரிவிக்க ஓடி வந்தனர். அவன் விடயத்தில் பலமுறை தோல்வியைத் தழுவிக் கொண்ட இந்தியப் படையினர் ஓடி வந்த மக்களை மேற் கொண்டு நகர விடாது அவ்விடங்களிலேயே அதாவது தெருவீதியிலேயே இருத்தி விட்டனர்.



சுற்றியுள்ள காணிகள், வீடுகள், வீதிகள் என்று எல்லா இடங்களிலும், எந்தப் பக்கம் பார்த்தாலும் இந்தியப் படையினர் நிறைந்து சுற்றி வளைத்திருந்தனர். நடுவில் மொறிஸ் தன் சகாக்களுடன் தனது பணியில் ஈடுபட்டிருந்தான்.



தான் காட்டிக் கொடுக்கப் பட்டதையும், சுற்றி வளைக்கப் பட்டிருப்பதையும், தன் நிலையையும் அறிந்த போது மொறிஸ் சிறிதும் கலங்கவில்லை. அஞ்சி ஓடவில்லை. தன் மெய்ப்பாது காவலனையும், காவல் கடமைக்குப் பொறுப்பான போராளியையும் மட்டும் தன்னுடன் நிற்கச் சொல்லி விட்டு

இந்தியப் படையை நோக்கிச் சுட்டவாறே

"நான் ஒரு கை பார்த்திட்டு வாறன். நீங்கள் ஓடுங்கடா"



என்று கத்தினான். அவன் கட்டளைப் படி மிகுதி ஐவரும் அவன் சொன்ன பாதை வழியே சுட்டுக் கொண்டு ஓடினர்.



மொறிஸ் தொடர்ந்து இந்தியப் படையுடன் நேரடியாக மோதினான். அவனது துப்பாக்கி ரவைகள் இந்தியப்படையில் மூன்று பெரியவர்களைச் சுட்டு வீழ்த்தியது. இந்த நேரம் இந்தியப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு காவல் போராளி சிறீதரன் (வெள்ளை) பலியானான்.



மொறிஸ் தொடர்ந்து போராடினான். இந்தியப் படையினர் சரமாரியாகச் சுட்ட சூடுகள் அனைத்துக்கும் தப்பித் தப்பிப் பாய்ந்த படி, அவர்களைச் சுட்டவாறே அவன் அடுத்த காணிக்குள் பாய முற்பட்டான். அந்த வேளையிலேயே பின் காணி முழவதும் இந்தியப்படை நிற்பதை அவதானித்தான். இந்த நிலையிலுங் கூட அவன் கலங்கவில்லை. தொடர்ந்து அவர்களை நோக்கிச் சுட்டுக் கொண்டும் அவர்களின் சூட்டிலிருந்து தப்பிக் கொண்டும் இருந்தான்.



துப்பாக்கி ரவையினால் அவனை வீழ்த்த முடியாதென்பதை உணர்ந்த இந்தியப் படையினர் அவன் நின்ற இடத்தைக் குறிபார்த்து பசூக்கா ஷெல்லும் அடித்து கிரனைட்டையும் எறிந்தார்கள். ஷெல் துண்டுகள் அவன் மார்பையும் தலையையும் பதம் பார்க்க கரும்புகை மண்டலத்துக்குள் இரத்த வெள்ளத்தோடு மண்ணுக்கு வித்தானான் மொறிஸ்.



பின் அவனின் மெய்ப் பாது காவலன் ஜெகேசன் (லெப். ரம்போ)இன் உடலையும் சல்லடையாக்கினர் இந்தியப் படையினர்.

மாவீரர்களான மொறிஸ், ரம்போ, வெள்ளை மூவரையும் இழந்து நாடே அழுதது.

மொறிஸை விண்ணுலகுக்கு அனுப்பிய இந்தியப் படையினருக்குப் பதவி உயர்வாம்! விருந்தாம்! தங்கப்பதக்கமாம்!



மொறிஸ் நாட்டில் மக்களுடன் மக்களாக நின்று போராடி மண்ணுக்கு வித்தானான். மொறிஸின் தம்பி மயூரன் காட்டில் தலைவர் அருகில் நின்று-

பின்னர் பூநகரிச் சமரில் 11.11.93 இல் மண்ணுக்கு வித்தானான்.



திலீபன்

யேர்மனி

மாவீரன் வெங்கடேஸ்

படம் போல இன்னும் மனதுள் பதிந்து போயிருக்கும் காட்சிகளை

நினைந்து நினைந்து கலங்கும் ஒரு தாயின் நினைவு.




வெங்கடேஸ் - எனது மகன் மொறிஸின் அருமைத் தோழன். கடற்புலி மேஜர் பாமாவின் அண்ணன். எனக்கு அவன் அன்பு மகன்.



அவன் எங்கள் வீட்டுக்கு வரும் போதெல்லாம் - பசிக்குதணை. கெதியாச் சமையுங்கோணை. என்று உரிமையோடு என்னிடம் சொல்லுவான். சமைத்ததும் சாப்பிடுவான். நான் அவனுக்காகவும் அவன் போன்ற மற்றைய போராளிப் பிள்ளைகளுக்காகவும் கடலை, பருப்பு, முறுக்கு... என்று எல்லாம் பொரித்தும் சுட்டும் வைத்திருப்பேன். அவன் வரும் போதெல்லாம் அவைகளை மிகவும் விரும்பி ருசித்துச் சாப்பிடுவான். தன் வீடு போலவே என் வீட்டில் நடந்து கொள்வான்.



எனது மூக்குக் கண்ணாடியை நான் கழற்றி வைத்தால் போதும் - அதை எடுத்துப் போட்டுக் கொண்டு அயர்ண் பண்ணி வைத்திருக்கும் சேர்ட் களில், காசைப் பொக்கற்றினுள் வைத்தால் வெளியில் தெரியக் கூடிய வகையிலான ஏதாவதொரு மெல்லிய சேர்ட்டையும் தெரிவு செய்து எடுத்துப் போட்டுக் கொண்டு, என்னிடம் தாள் காசு தரும்படி கேட்டு வாங்கி அதைப் பொக்கற்றுக்குள் வைத்து விட்டு மொறிஸின் இளையக்காவிடம் - இளையக்கா இப்ப என்னைப் பார்க்க அறிவாளி மாதிரி இருக்குதோ? - என்று கேட்பான்.



அனேகமான சமயங்களில் - தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே

மான் போல வந்தவரை யார் அடித்தாரோ.. என்ற பாடல் கசற்றைப் போட்டு விட்டு றேடியோவுக்கு முன்னால் மேசையில் தன் தலையைச் சாய்த்து வைத்துக் கொண்டு பாடலைக் கேட்ட படி அழுது கொண்டிருப்பான்.

அவன் கண்களில் இருந்து கண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும். நான் பலதடவைகள் அதைப் பார்த்து - ஏன் அப்பு அழுகிறாய்? - எனக் கேட்டிருக்கிறேன்.



ஆனால் அவன் ஒரு நாளும் அந்தப் பாடலுக்கும் அவனுக்கும் இடையிலான துயரத்தைப் பற்றி எனக்கு எதுவுமே சொன்னதில்லை.



அன்றும் அதாவது 1988ம் ஆண்டு மே மாதம் 10ந் திகதி எங்கள் வீட்டுக்கு வந்தவன் அந்தப் பாட்டுக் கசற்றைப் போட்டுக் கேட்டு அழுது கொண்டிருந்தான்.



- அப்பு ஏனடா அழுகிறாய்? சோல்லனடா. என்றேன்.



அவன் கண்களைத் துடைத்துக் கொண்டு - ஒண்டுமில்லை அம்மா. ஒரு நல்ல ரீ (தேநீர்) உங்கடை கையாலை தாங்கோ என்றான்.



- இரு அப்பு உடனை கொண்டு வாறன். - என்று சொல்லி விட்டு அடுக்களையை நோக்கி விரைந்தேன்:



அந்த நேரம் எனது மகன் மொறிஸ் அவசரமாய் வீட்டுக்குள் ஓடி வந்தான். வந்ததும் வராததுமாய்

- வெங்கடேஷ் வெளிக்கிடு கெதியாய். கூட ரவாஸ் வருவான் அவனையும் கூட்டிக் கொண்டு போ. - என்று சொல்லிக் கொண்டு ஒரு பையில் ஏதோ பொருட்களைப் போட்டு வெங்கடேஷிடம் கொடுத்தான்.



- அம்மா ரீ (தேநீர்) கொண்டு வருவா. குடிச்சிட்டுப் போறன். - என்று வெங்கடேஷ் சொல்வது என் காதில் விழுந்தது. நான் அவசரமாய் தேநீரைத் தயாரிக்கத் தொடங்கினேன்.



ரவாஸ் மிக்ஸரைக் கொறித்துக் கொண்டிருந்தான்.



- போதுமடா எழும்படா - என்ற மொறிஸின் அதட்டல் எனக்குக் கேட்டது.



நான் இருவருக்கும் அவசரமாய் கோப்பைகளில் தேநீரை ஊற்றிக் கொண்டு ஓடி வந்தேன். அவர்கள் இருவரும் எனது வீட்டின் கிழக்குப் பக்கக் கதவால் வெளியில் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.



- அவங்கள் ரீ யைக் குடிச்சிட்டுப் போகட்டுமன் - என்றேன்.



- சும்மா இருங்கோ அம்மா. அவங்களுக்கு இப்ப நேரமில்லை. இரவு வருவாங்கள். உங்கடை ஆசைக்கு எல்லாம் குடுங்கோ - என்றான்.

நான் கலக்கத்தோடு வாயடைத்துப் போய் நின்றேன்.



அவர்கள் - அம்மா போட்டு வாறம். மொறிஸ் சரிதானே...! - என்ற படி பின் கேற்றைத் திறந்து கொண்டு வெளியேறினார்கள்.



அவர்கள் போய் கொஞ்ச நேரம்தான் ஆகியிருக்கும். பயங்கரமான வேட்டுச் சத்தங்கள் கேட்டன. நாமெல்லோரும் கதி கலங்கி விட்டோம். மொறிஸின் முகத்தைப் பார்க்க முடியவில்லை. அவன் எங்கோ வெளியில் ஓடினான். நாம் அதாவது நானும் எனது பெண் பிள்ளைகளில் மூவரும் செயல் இழந்து தவியாய்த் தவித்த படி துடித்துக் கொண்டு நின்றோம்.



இரவு எட்டு மணியளவில் தீராத சோகத்துடன் மொறிஸ் வீடு வந்து சேர்ந்தான்.



- என்னடா..! என்ன நடந்தது?- நான்தான் கேட்டேன்.



அவன் குமுறிக் கொண்டு - வெங்கடேஷ் போயிட்டான் அம்மா - என்றான். தொடர்ந்து அம்மா ரவாசும்தான் போயிட்டான். - என்று சொல்லித் தேம்பினான்.

எனக்குச் சம்மட்டியால் எனது தலையில் யாரோ அடித்தது போல இருந்தது.



வெங்கடேஷ் கொண்டு சென்றது முக்கியமானவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய சில மிக முக்கியமான பொருட்கள் என்பதுவும் - இந்தியன் ஆமியின் துரத்தலால் ரவாஸ் குண்டடி பட்டு வீழ்ந்ததும், வெங்கடேஷ் ஓடி ஓடி இயலாத நிலையில் ஒரு வீட்டில் புகுந்து தனக்குத் தானே காதுக்குள் வெடி வைத்து மரணித்து கொடிய உண்மையும் பின்புதான் எமக்குத் தெரியவந்தன. அழுதோம். கதறினோம். அவர்கள் வித்துடல் கூட எமக்குக் கிடைக்கவில்லை.



ஆனால் அன்றும் என்றும் இன்றும் ஏன் அவன் அந்தப் பாட்டுக்கு அழுதான் என்ற விடை எனக்குக் கிடைக்கவேயில்லை. விடையைக் கூறாமலே அவன் போய் விட்டான். - ஒரு நல்ல ரீ உங்கடை கையாலை தாங்கோ. என்று கேட்டவன் - அன்று எனது ரீ யைக் கூடக் குடிக்காமல் போய்விட்டான்.



படம் போல இன்னும் மனதுள் பதிந்து போயிருக்கும் காட்சிகளை

நினைந்து நினைந்து கலங்குகிறேன்.



திருமதி . சிவா. தியாகராஜா

மன்கைம் - யேர்மனி


தென்பாண்டிச் சீமையிலே... பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் நெஞ்சு குலுங்கி அதிர்வுறும். என் பிள்ளை வெங்கடேஷின் நினைவு என்னை அலைக்கழிக்கும்.