படம் - இருவர்
பாடியவர் - சந்தியா
வரிகள் - வைரமுத்து
பூக்கொடியின் புன்னகை
அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை
சின்ன வயதில் என் அப்பாவுடன் நிறைய சிவாஜி கணேசனின் படங்களைப் பார்த்திருக்கிறேன். அதற்கேற்ப திருமணத்தின் பின் என் கணவருடன் நிறைய எம்.ஜி.ஆர் படங்களைப் பார்த்தேன்.
எம்.ஜி.ஆர் இன் நடிப்பில் எனக்கு அந்தளவாக ஈடுபாடு ஏற்படவில்லையானாலும், எம்.ஜி.ஆர் இன் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப் பட்ட இருவர் படம் எனக்குப் பிடித்திருந்தது. படத்தில் மோகன்லாலை மோகன்லாலாகப் பார்க்க முடியாமல் அவரது நடிப்பு எம்.ஜி.ரையே பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
அத்தோடு படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும், ஒவ்வொரு காலகட்டத்துக்கேற்ப அமைக்கப் பட்டிருந்தது மட்டுமல்லாமல், வைரமுத்துவின் கவிதை வரிகளும், ரகுமானின் இசையும் சேர்ந்து இடம்பெற்ற எல்லாப் பாடல்களுமே குறிப்பிடத் தக்கவகையில் நன்றாகவும் அமைந்திருந்தன. அவைகளில் 'நறுமுகையே.. நறுமுகையே...' என்ற உன்னிகிருஸ்ணன்-பம்பாய்ஜெயசிறீ இணைந்து பாடிய பாடலும், 'பூக்கொடியின் புன்னகை அலை நதியின் புன்னகை...' என்ற சந்தியா பாடிய இந்தப் பாடலும் என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தன.
1962 இல் ஏற்கெனவே எம்.ஜி.ருடன் சில படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜானகி, வீட்டில் உள்ள அழுத்தம் தாங்க முடியாத நிலையில், எம்.ஜி.ருடன் விரும்பி வாழ முற்பட்ட நிலை இப்பாடல் மூலம் காட்டப் பட்டுள்ளது.
பழைய காலப் படங்களில் வரும் காட்சி போலவே அமைக்கப்பட்ட பாடற்காட்சியில், சந்தோசமான முன்பாதியும், சோகம் நிறைந்த பின்பாதியுமான பாடலுக்கு கெளதமியின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது.
படம் பார்த்து முடிந்த பின்னும், நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடிய பின்னும்.. நிழல்கள் ரவியின் அதட்டலும், தனது சொந்த ஆதாயத்துக்காக கெளதமியை நடாத்திய விதமும், அந்தக் கொடுமைக்குள் அவதியுறும் கெளதமியும்... ஏதோ நிஜமான பாத்திரங்கள் போலவே, நினைக்கும் போதெல்லாம் மனதை நெருடிக் கொண்டிருந்தனர். அத்தனை தத்ரூபமாக கெளதமியும், நிழல்கள் ரவியும் நடித்திருந்தனர்.
நடிப்பு அற்புதமாக அமைந்த அதே நேரத்தில், பாடல் வரிகளும் அருமையாக அமைந்திருந்தன. நிழல்கள் ரவியின் கொடுமைக்குள் துன்புறும் கெளதமி, மோகன்லால் மேல் காதல் கொண்டு மோகன்லாலைத் தன்னை விட்டுப் போக வேண்டாமென்றும், மீண்டும் வேதனைக்குள் தள்ள வேண்டாமென்றும் கேட்டுப் பாடும்....
நீலம் மட்டும் இழந்து விட்டால்
வானில் ஒரு கூரை இல்லை
சூரியனை இழந்து விட்டால்
கிழக்குக்கொரு திலகம் இல்லை
நீ ஒரு முறை திரும்பிக் கொண்டால்
என் உயிருக்கு உறுதி இல்லை.
என்ற வரிகள் மிகவும் அழகானவையும், மனதைத் தொடுபவையும்.
பாடல்கள் இத்தனை நன்றாக அமைந்ததற்கு, நடிப்பு, பாடல் வரிகளின் அழகு மட்டுமல்லாது ரகுமானின் இசையும் காரணமாக இருந்தது. Westernmusic இன் பாணியிலேயே ரகுமானால் இசையமைக்க முடியும் என்று ஒரு சாரார் மத்தியில் இருந்த அதிருப்தியான எண்ணத்தை மாற்றும் படியாக, ரகுமானின் இப்பாடலுக்கான இசையமைப்பு அமைதியாக, அருமையாக அமைந்திருந்தது.
பூக்கொடியின் புன்னகை
அலை நதியின் புன்னகை
மழை முகிலின் புன்னகை
நீ காதலின் புன்னகை
அந்தப் பெளர்ணமி என்பது
ஒரு மாதத்தின் புன்னகை
உன் வருகையில் பூத்ததென்ன
என் வாழ்க்கையின் புன்னகை
உனது நிழல் தரை விழுந்தால்
என் மடியில் ஏந்திக் கொள்வேன்.
வான் மழையில் நீ நனைந்தால்
தென்றல் கொண்டு நான் துடைப்பேன்
ஒரு நாள் என்னைச் சோதித்துப் பார்
ஒரு வார்த்தைக்கு உயிர் கொடுப்பேன்
நீலம் மட்டும் இழந்து விட்டால்
வானில் ஒரு கூரை இல்லை
சூரியனை இழந்து விட்டால்
கிழக்குக்கொரு திலகம் இல்லை
நீ ஒரு முறை திரும்பிக் கொண்டால்
என் உயிருக்கு உறுதி இல்லை.
சந்திரவதனா
யேர்மனி