நெஞ்சை உலுக்கிய கொலைச் செய்தியில் நிதர்சினியின் மரணம் தந்த அதிர்ச்சியில் தமிழ்மகன்தான் இந்தத் தகாத வேலையைச் செய்தான் என்ற போது மனசு வெட்கித் தலை குனிந்தது உண்மை
இது பற்றி றயாகரன் மிகக் காரசாரமான கருத்துக்களை முன் வைத்துள்ளார். ஆனாலும் ஏதோ ஒன்று உறுத்துகிறது. எல்லோரும் ஒட்டு மொத்தமாகக் கூறுவது போல் பெண்களின் கவர்ச்சியினாலும், அவாகள் கவர்ச்சிகரமாக உடை அணிவதாலும்தான் தப்பே நடக்கிறது என்ற தொனிதான், இவரின் கருத்திலும் தொக்கி நிற்கிறது. கூடவே தனது கருத்துக்கு வலிமை சேர்க்க இலக்கியங்களின் துணையை நாடி வலிமையும் தேடியுள்ளர்.
கடைசியில் என்ன, சுற்றிச் சுற்றி வந்து பெண்களின் உடை அணியும் சுதந்திரத்துக்கு ஒரு கட்டுப்பாட்டைக் கொணர்ந்துள்ளார்.
ஏன் ஆண்களின் அழகை இலக்கியங்கள் வர்ணிக்கவில்லையா? திரண்ட புஜங்களும், அகன்ற தோள்களும்.... இப்படி எத்தனை வர்ணனைகள். இதை வாசித்த உடனேயே உணர்ச்சிகளை அடக்க முடியாது பெண்கள் மிருகங்களாகி விடுகிறார்களா? அல்லது ஒரு ஆண் தன் தாயையோ அல்லது தங்கையையோ குளிக்கும் போதோ அல்லது உடை மாற்றும் போதோ கண்டு விட்டால் மிருகமாகி விடுவானா? இல்லை. இல்லவே இல்லை. அந்நியப் பெண் மீதுதான் தனது அடாவடித் தனத்தைக் கட்டவிழ்த்து விடுகிறான். அதற்கு கவர்ச்சி அது இது என்று சால்யாப்பு வேறு.
தென்அமெரிக்கக் காடுகளில் வாழும் "தோங்கா" பழங்குடியினரை பெண்களின் மார்பகங்கள் கவருவதே இல்லையாம். இதழுடன் இதழ் பதித்து முத்தம் கொடுக்கும் வழக்கம் கூட அவர்களிடம் இல்லையாம்.
இப்படிக் கூட நடைமுறைகள் இருக்கும் போது பெண்களின் உடைகளின் மேல் ஆண்கள் தமது மிருகத்தனத்தை ஒழிக்க முற்படுவது அபத்தம்.
.......
எந்தப் பலாத்காரத்தையும் எதிர்க்க பெண்களிடம் துணிவும் வலுவும் இருக்க வேண்டும். அது பெண்களிடம் இல்லையென்று உணரும், தெரியும் பட்சத்தில்தான் ஆண்கள் எதையும் பெண்கள் மேல் திணிக்கவும், பெண்களைப் பலாத்காரப் படுத்தவும் முனைகிறார்கள். துணிகிறார்கள்.
பெண்களைப் பெற்றவர்கள் இதையுணர்ந்து பெண் பிள்ளைகளுக்குத் துணிவூட்டி வளர்த்தால் பெண்களின் எதிர்காலம் இவ்வளவு மோசமானதாக இருக்காது.
சந்திரவதனா
1999-2000
சக்தி இதழுக்காக