Friday, December 10, 2004

சினிமாப் பாடல்கள் எனது பார்வையில் - 6

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது

கருடா சௌக்கியமா

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே

கருடன் சொன்னது.......


(சூரியகாந்தி படத்தில் இடம்பெற்ற பாடலின் வரிகள்)



எத்தனை அர்த்தம் நிறைந்த வரிகள் இவை.

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே!



நல்லவர்களோ, கெட்டவர்களோ... அல்லது புத்தியுள்ளவர்களோ, புத்தியற்றவர்களோ... எவராயினும் சரி. அவர்களுக்கென்று சரியானதொரு இடம் கிடைத்து விட்டால் போதும். வாழ்க்கையில் வென்று விடுவார்கள்.



பணமுள்ள புத்தியற்றவன் முன் பணமற்ற புத்தியுள்ளவன் தாழ்ந்து போவதும்ä அதிகார பலமுள்ள கெட்டவனிடம் அதிகார பலமற்ற நல்லவன் தாழ்ந்து போவதும் நடப்பில் உள்ள விடயங்கள்தான். இவை இன்று நேற்று மட்டுமல்ல. என்றும் நடக்கும் சங்கதிகள்.



வீதியிலே ஊரும் பாம்பு மனிதர்களின் பார்வையில் பட்டாலே போதும். அடித்தே கொன்று விடுவார்கள். கருடனின் பார்வையில் பட்டால்..... அது பாம்புக்கு இன்னுமொரு இம்சை. இதே பாம்பு பரமசிவன் கழுத்தில் இருக்கும் போது அதன் கதையே வேறு. வீதியிலே கண்டதும் அடித்துக் கொல்லும் மனிதரே இரு கை தூக்கி பயபக்தியுடன் தொழுது விழுந்தெழுவார்கள். பரமசிவனின் கழுத்துக்குப் போனதால் அப்படியொரு மவுசு பாம்புக்கு. சந்தர்ப்ப வசத்தால் கிடைத்த அந்த உயர்ந்த நிலையில் இருந்து கொண்டு தன்னை யாராலும் நெருங்க முடியாதென்ற நம்பிக்கையுடன் கருடனைச் சுகம் விசாரிப்பது பாம்புக்குச் சுகமான விடயம்.



அதனால்தான்

யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்

எல்லாம் சௌக்கியமே

என்று கருடன் எரிச்சலுடன் சொல்கிறது.



மனிதருக்கிடையில் இருக்கும் இந்த உயர்ந்த நிலையில் இருப்பவருக்கும் தாழ்ந்த நிலையில் இருப்பவருக்குமான அந்தஸ்தின் அளவை பரமசிவனின் கழுத்திலிருக்கும் பாம்பையும் அதை வெல்லக் கூடிய கருடனையும் வைத்துச் சொன்னது மிகவும் பொருத்தமானதாகவும் ரசிக்கக் கூடியதாகவும் அதே நேரம் அதன் தாத்பர்யத்தை நன்கு உணர்த்துவதாகவும் உள்ளது.



இப்படத்தில் கூட கணவன் மனைவியாக பாத்திரமேற்றிருக்கும் முத்துராமனுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் உயர்வு தாழ்வுப் போராட்டம். அனேகமான எந்த ஆண்களாலும் மனைவி தன்னை விட பணத்தாலோ அல்லது பதவியாலோ உயர்ந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இங்கு ஜெயலலிதா சற்று உயர்ந்து விட்டதில் முத்துராமனின் மனதுக்குள் தாழ்வு மனப்பான்மையுடனான போராட்டம். அதனால் குடும்பத்தில் ஒற்றுமையின்மையும் குழப்பமும் விஸ்வரூபமெடுத்து தாண்டவமாடிக் கொண்டிருந்தது.



இந்த நிலையில் இந்தத் தம்பதிகள் ஒற்றுமையான தம்பதிகள் யார்...? என்ற ஒரு போட்டியில் கலந்து கொள்ள வைக்கப் படுகிறார்கள். அப்போட்டியின் போதுதான் இப்பாடல் காட்சியாக்கப் படுகிறது. வீட்டினுள்ளே உயர்வு தாழ்வுப் போட்டியில் மனதால் பிரிந்திருக்கும் இத்தம்பதிகள் ஒற்றுமையான தம்பதிகளுக்கான இப்போட்டியிலே முதலிடத்தைப் பெறுகிறார்கள்.



இப்பாடல் வெளிவந்த காலத்தில் இதை முணுமுணுக்காதோரே இல்லையென்று சொல்லலாம். அவ்வளவு பிரபல்யமாக இருந்தது. ஏனெனில் பாடல் வரிகள் அத்தனை அர்த்தம் நிறைந்தனவாக இருந்தன.



வண்டி ஓடச் சக்கரங்கள்

இரண்டு மட்டும் வேண்டும். - அந்த

இரண்டில் ஒன்று சிறியதென்றால்

எந்த வண்டி ஓடும்.


இவ்வரிகள் கூறுவதென்ன...?

வாழ்க்கை என்ற வண்டில் நிதானமாகவும், நேர்சீராகவும் ஓட கணவன் மனைவி என்ற இரு சக்கரங்களுமே பெரிது சிறிது என்ற பாகுபாடின்றி ஒரே அளவாக இருக்க வேண்டும். ஆனால் அனேகமான எல்லா வீடுகளிலும் ஆண் உயர்ந்தவன் என்றும் பெண் அவனை விடச் சற்றேனும் தாழ்ந்தவள் என்றும்தான் கருதப்பட்டு வாழ்க்கை வண்டில் ஓடுகிறது. இல்லையென்றால் பெண்ணின் கை ஓங்கி, அதைச் சகிக்கும் பக்குவம் இன்றி ஆணின் மனம் சுருங்கி மனஉளைச்சலுடன் வாழ்வு கழிகிறது. இந்த இரண்டு வகையான வாழ்க்கையுமே வேதனையானவைதான்.



சரியான முறையில் நாம் சிந்தித்துப் பார்ப்போமேயானால் ஆணில்லாத ஒரு பெண்ணின் தனியான வாழ்க்கையோ, அல்லது ஆண்களே இல்லாத பெண்கள் மட்டுமான ஒரு உலகமோ - அதே போல் பெண்ணில்லாத ஒரு ஆணின் தனியான வாழ்க்கையோ, அல்லது பெண்களே இல்லாத ஆண்கள் மட்டுமான ஒரு உலகமோ ஒரு போதும் சந்தோசமானதாகவோ, சுவையானதாகவோ அமையாது.



வாழ்க்கையென்றால் இரு பகுதியுமே நான் நீ என்ற போட்டி இன்றி நாம் என்று வாழ வேண்டும். உயர்வு தாழ்வு என்ற எண்ணம் மனதில் சிறிது கூட இன்றி நீயில்லாமல் நானில்லை என்ற உணர்வை மனதில் கொண்டு அன்பு கலந்த நட்போடு வாழ வேண்டும். அதுதான் தாம்பத்தியத்தின் தத்துவம்.



உயர்ந்த இடத்தில் இருக்கும் போது

உலகம் உன்னை மதிக்கும்

உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்

நிழலும் கூட மிதிக்கும்


பாடலின் ஒவ்வொரு வரியிலும் எம்மால் நல்ல தத்துவார்த்தமான கருத்துக்களைக் கண்டு கொள்ள முடிகிறது.



பாடலின் இறுதி வரிகளான

நீயும் நானும் சேர்ந்திருந்தோம்

நிலவும் வானும் போலே

நான் நிலவு போலத் தேய்ந்து வந்தேன்

நீ வளர்ந்ததாலே


என்பது மனைவி ஜெயலலிதாவின் உயர்வைத் தாங்கிக் கொள்ள முடியாது தாழ்வு மனப்பான்மையின் நிமித்தம் தான் தாழ்ந்து போய் விட்டதாய் எண்ணும் முத்துராமனின் மனக்குமுறலைக் காட்டுவதாய் அமைகிறது.



இப்படத்தின் பெயர் கூட பெண்கள் சூரியகாந்திப்பூப் போல இருக்க வேண்டும் என்பதற்காகவே சூரியகாந்தி என வைக்கப் பட்டது.



அதில்தான் எனக்குக் கருத்து வேறுபாடு. பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும் பெண்கள் பக்கம் தம்மைத் திருப்பத் தயாராக இருக்க வேண்டும்.

ஆண் துணையில்லாத பெண்ணோ, பெண் துணையில்லாத ஆணோ முழுமையான வாழ்க்கையை, முழுமையான மகிழ்வைப் பெறாமல்தான் வாழ்வார்கள்.



அப்படியிருக்க பெண் மட்டுமேன் சூரியகாந்திப்பூ போல் ஆக வேண்டும்...?

தாம்பத்தியத்தில் ஆணும் சூரியகாந்திப்பூ ஆகட்டுமே..!



சந்திரவதனா

யேர்மனி

30.3.2004