Tuesday, October 19, 2004

எங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா?

நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கள் நாட்டில் இருப்பது போலவேதான் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். எல்லோரும் சொல்வது போல எங்கள் ஊர்க்காதல் மட்டுந்தான் ஆழமானதும், மேலைநாட்டுக் காதல் ஆழமற்றதும் என்றில்லை. ஊர்கள் வேறு படலாம். ஆனால் மனிதர்களும், மனங்களும் ஊர்களை வைத்து வேறு படுவதில்லை. அதே போலத்தான் காதலும்.



எமது நாட்டில் காதலிப்பதே உலகமகா குற்றமாகக் கருதப்பட்டு அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளும், தடைகளும் இளையவர்களுக்கு விதிக்கப் படுகின்றன. கட்டுப்பாடுகள் அதிகமாகும் போதுதான் கட்டுமீறும் எண்ணமும், தடைகள் அதிகமாகும் போதுதான் அதைத் தாண்ட வேண்டுமென்ற தீவிரமும் ஏற்படுகின்றன. இந்த நிலையில்தான் பின் விளைவுகள் பற்றிய சிந்தனைகளெதுவுமின்றி காதலே வாழ்க்கை என்றாகிறது. எதிர்ப்புக்களை உடைத்தெறிய மனம் துணிந்து, அவசரக் கல்யாணமும் நடந்து விடுகிறது.



மேலைநாட்டுக் காதல் அப்படியில்லை. காதலுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. ஆதலால் கள்ளமாக காதலிக்க வேண்டிய அவசியமோ, ஓடிப் போக வேண்டிய அவசியமோ இல்லை. காதல்தான் வாழ்க்கை என்றில்லாமல், அதற்காகப் போராட வேண்டிய அவசியமுமில்லாமல், காதல் ஒரு புறமும், அதை விட முக்கியமான கல்வி மறுபுறமுமாக வாழ்க்கை ஓடுகிறது. அவசரக் கல்யாணங்கள் அவசியமற்றதாகிறது.



இவைகளை வைத்துக் கொண்டு எங்கள் ஊர்க்காதல்தான் ஆழமானதென்று சொல்லி விட முடியாது. எங்கள் ஊரிலும் காதலிப்பதாக நடித்து ஏமாற்றியவர்களும் இருக்கிறார்கள். மேலை நாடுகளிலும் காதலைப் புனிதமாக நினைப்பவர்களும், ஆழமாகக் காதலிப்பவர்களும் இருக்கிறார்கள்.



அதே போலத்தான் திருமணமானவர்களும். வாழ்க்கை என்று வரும் போது, சேர்ந்து வாழ்கையில் கணவன் மனைவியருக்கிடையில் கருத்து வேறுபாடுகளும் அவரவர் விட்டுக் கொடுக்கும் தன்மை, சகிப்புத்தன்மை என்பவற்றிற்கேற்ப மனவிரிசல்களும் ஏற்படலாம். இந்த விரிசல்கள் வெளிநாட்டவர்களுக்கு மட்டுந்தான் ஏற்படும். எம்நாட்டவர்க்கு ஏற்படாதென்று சொல்லி விட முடியாது. வெளிநாட்டவர்கள் மத்தியில், மனவிரிசல்கள் ஏற்படும் பட்சத்தில், அவர்கள் பிரிந்து போய் விடுவதற்கு ஏதுவாக சட்டங்களும், வாழ்க்கை வசதிகளும் கை கொடுத்து விடுகின்றன. எமது நாட்டில் மனவிரிசல்கள் ஏற்பட்டாலும் பிரிந்து போய் விட முடியாத படி சமூகம், கலாசாரம், பண்பாடு போன்ற சில சாமாச்சாரங்கள் தடுத்து விடுகின்றன. இதனால் எங்கள் ஊர்க்காதல் ஆழமானது என்று சொல்லி விட முடியாது.



அத்தோடு இன்றைய நிலையில் எத்தனையோ மேலைத்தேயப் பெண்கள் எங்கள் நாட்டு ஆண்கள் மேல் காதல் கொண்டு சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளையும் பெற்ற பின்னர், எமது நாட்டு ஆண்களால் கைவிடப்பட்டும் இருக்கிறார்கள். ஆழமான காதல் கொண்ட எமது நாட்டு ஆண்கள்தான் இந்த அநியாயத்தைச் செய்திருக்கிறார்கள். அதற்காக அந்த ஐரோப்பியப் பெண்கள் காதல் தோல்வி என்று சொல்லி எமது ஊர்ப் பெண்களைப் போல தற்கொலை வரை செல்வதில்லை. தமக்கென இன்னொரு துணையைத் தேடத்தான் முயற்சிக்கிறார்கள். அதை வைத்து அவர்கள் காதல் ஆழமற்றது என்று சொல்லி விட முடியாது. அவர்கள் மனதிலிருக்கும் அந்தக் காதல் வேதனை வடுவாக மாற அவர்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். சும்மா மேலோட்டமாகப் பார்த்து எங்கள் ஊர்க்காதல் ஆழமானதென்று சொல்லி விட முடியாது.



முதலாவதாகக் கட்டுப்பாடுகளும், தடைகளுமே எங்கள் ஊர்க்காதலை தீவிரமாக்குகின்றன. இரண்டாவதாக சமூகம், கலாசாரம், பண்பாடு போன்ற சில சமாச்சாரங்கள் எங்கள் காதல் ஆழமானதென்று பொய் சொல்ல வைக்கின்றன. அதற்காக எமது காதலெல்லாம் பொய் என்று சொல்ல வரவில்லை. ஆழமான காதலுடன் வாழும் எம்மவர்கள் போலவே ஆழமான காதலுடன் வாழும் வெளிநாட்டவரும் இருக்கிறார்கள். காதல் எல்லோருக்கும் பொதுவானது. நாட்டை வைத்து அது மாறாது.

விருந்தாளிகள்

புலம்(பல்)



தொலைபேசி கிணுகிணுக்கிறது.



ஆரது இந்த நேரம்...? ஞாயிறும் அதுவுமா...?

நல்ல வெயில் எறிக்குது. உடுப்புகளை விரிச்சு முடிச்சுப் போடுவம் எண்டு பார்த்தன். முணுமுணுத்தபடி தயங்கிய மனதுடன்தான் பல்கணியிலிருந்து ஓடி வந்து செண்பகக்கா தொலைபேசியை எடுத்தா.



"வணக்கம் அக்கா! அண்ணை நிற்கிறாரோ?"



இல்லை. அவர் வெளியிலை போட்டார். நீங்கள்...?"



"நான் அக்கா ரவி. அவரோடை முந்தி லாகரிலை இருந்தனான். அவருக்கு என்னைத் தெரியும்."



"எந்த லாகரிலை...?"



"அது வந்து... வங்கன் லாகர்.... தெரியுமோ அக்கா?"



ம்.. இந்த மனுசன் சொன்னதுதான். நான் வரமுந்தி ஏதோ ஒரு.. லாகரிலை இருந்ததெண்டு. அது எந்தக் காலம்..! இப்ப அதையேன் இவன் புதுப்பிக்கிறான்..! இதைச் சாட்டிக் கொண்டு இப்ப ஏதும் கலியாணவீடு, சாமத்தியவீடு எண்டு சொல்லி, செலவு வைக்கப் பண்ணப் போறானோ.. என்னவோ...?



"எப்ப 1985 இலை ஒண்டா இருந்தனிங்களோ..? "



"ஓமக்கா. பியர்கேஸ் ரவி எண்டு சொல்லியிருப்பார்."



"அட நீங்கள்தான் சோசல் காசிலை பியர் வாங்கி வைச்சிட்டு 1 மார்க்குக்கு வித்த ஆளோ..? இப்ப விளங்குது."



"ஹி..ஹி...ஹி.. எல்லாம் அப்பச் சொல்லியிருக்கிறார். "



"அது சரி இப்ப என்ன விசயமா அடிச்சனிங்கள்..? என்னேம் விசேசமோ..?"



"நான் சுவிசுக்குப் போட்டு வாற வழியிலை அண்ணையையும் ஒருக்கால் பார்த்திட்டுப் போவம் எண்டு வந்தனான்."



என்னடா.. இது? 19வருசம் கழிச்சு அண்ணையின்ரை நினைவு இவனுக்கு வந்திருக்கு. இவனைக் காணேல்லையெண்டுதான் அண்ணை அழுது கொண்டிருக்கிறாராக்கும்.



" என்னக்கா சத்தத்தைக் காணேல்லை. கண்டு கனகாலமாப் போச்சு. அதுதான் வந்தனாங்கள்."



அதென்ன.. வந்த.. னாங்கள். கன ஆக்களோ..!

செண்பகக்காவுக்கு சமையல் சாப்பாடு என்று நினைவில் வந்து பயமுறுத்தியது. எப்படியாவது வெட்டி விட்டிடோணும் என்று நினைத்துக் கொண்டா.



"அவர் தம்பி வீட்டிலை இல்லை. வெளியிலை போட்டார். நீங்கள் பிறகொரு நாளைக்கு வாங்கோவன்."



"பிறகெப்ப அக்கா வாறது. இவ்வளவு தூரம் வந்திட்டம்?"



விடமாட்டான் போலையிருக்கு.



"எவ்வளவு தூரம் வந்திருக்கிறியள்..? ஆரார் வந்திருக்கிறியள்?"



"என்னோடை இன்னும் நாலுபேர். இங்கை உங்கடை இடத்திலைதான் ஒரு பெற்றொல் ஸ்டேசனிலை நிற்கிறம்."



அடப்பாவிகளா..?வெட்டவே ஏலாதோ..?



"சரியப்ப வாங்கோவன்"



"அங்காலை வர வழி தெரியேல்லையக்கா. அதுதான்..!"



தெரிஞ்சிருந்தால் வீட்டு வாசலிலையே வந்து பெல் அடிச்சிருப்பாங்கள் போலை இருக்கு.



"உப்பிடியே நேரே வந்து இரண்டாவது திருப்பத்திலை இடது பக்கம் திரும்பினிங்கள் எண்டால் எங்கடை றோட்டுத்தான். 3ம் நம்பர் வீடு."



செண்பகக்கா அவசரமாக ரசேந்திரண்ணையின்ரை தொலைபேசிக்கு அழைப்பு விடுக்க..

"ஆரது..? நானில்லாத நேரம் வீட்டை வரச்சொன்னனீரோ..?" எண்டு ஒரு தரம் சினந்து..

"ஓமப்பா அவன் என்னோடை லாகரிலை இருந்தவன்தான் வாறன்.. நான் உடனை வாறன்" என்று அவர் அமைதியாக..

அவர்களும் வீட்டு வாசலுக்கு வந்து பெல் அடிக்க சரியாக இருந்தது.



செண்பகக்காவுக்குப் பயங்கர எரிச்சல். அழையா விருந்தாளிகளை அப்போது அவ துளியும் எதிர்பார்க்கவில்லை. உடுப்புகளை விரித்துப் போட்டு வந்து ஆறுதலாக இருக்க வேண்டுமென்றுதான் மனசுக்குள் உச்சாடனம் பண்ணிக் கொண்டிருந்தவ. எதையும் வெளியில் காட்டாமல் சிரித்துக் கொண்டு "வாங்கோ. வாங்கோ" என்று வரவேற்றா.



"இருங்கோ. அவர் வெள்ளெனவே வெளியிலை போட்டார். இப்ப வந்திடுவார். என்ன குடிக்கிறிங்கள்? தேத்தண்ணி போடட்டே..?"



"வேண்டாம் வேண்டாம். குளிரா ஏதாவது குடிக்கத் தாங்கோ. "



செண்பகக்கா குளிர்சாதனப் பெட்டிக்குள் இருந்து தோடம்பழ யூஸைக் கொண்டு வந்து வைத்து கிளாசுகளையும் கொண்டு வந்து விட..



"கோலா இல்லையோக்கா..? " பியர்கேஸ் கேட்க,

செண்பகக்கா கீழே கெலருக்குள் சென்று, கோலா எடுத்துக் கொண்டு வந்து ஊற்றிக் கொடுத்தா.



இப்ப என்ன தேவைக்கு வந்திருக்கினம் என்ற எரிச்சல் மனதுக்குள் இருந்தாலும், சும்மா ஒப்புக்கு சுகநலம் விசாரித்துக் கொண்டிருக்க, ராசேந்திரத்தாரும் வந்து விட்டார். வாயெல்லாம் பல்லாய் வந்தவர்களோடு அளக்கவும் தொடங்கி விட்டார். பியர் குடிக்க ஒரு கொம்பனி கிடைத்து விட்டதிலான புளுகம் அவர் வார்த்தைகளில் துள்ளி விளையாடியது.



"என்னப்பா பெடியளுக்கு ஏதும் சாப்பிடக் குடுமன். நாலைஞ்சு றோல்ஸ் செய்தீர் எண்டால் நல்லாயிருக்கும். " செண்பகக்கா வந்தவர்களுக்குத் தெரியாமல் அவரை ஒருதரம் முறைத்து விட்டுக் குசினிக்குள் நுழைந்தா.



"என்னடாப்பா சாப்பிட்டனிங்கள்? "



"இன்னும் ஒண்டுமில்லையண்ணை. காலைமை வெளிக்கிட்டனாங்கள். "



"சொல்லிப் போட்டு வந்திருந்தியள் எண்டால் செண்பகக்கா சமைச்செல்லோ வைச்சிருப்பா. "



"ஒரு surprice ஆ இருக்கட்டுமெண்டுதான்..."



ம்... ம்... surprice இல்லையெண்டுதான் இங்கை அழுதனாங்களாக்கும்.



றோல்ஸ் முடிய.. இடியப்பம்.. கறி.. சொதி.. பிரட்டல்.. எல்லாம் முடித்து, அவர்கள் சாப்பிட்டுப் போன பின்னும், வேலை முடியாது.. கழுவி, துடைத்து, அடுக்கி, குசினிக்கு வெளியில் வந்த போது ஞாயிறைக் காணவில்லை. பல்கணியில் அரைகுறையில் விடப்பட்ட விரிபடாத உடைகள் வெயிலில் முறுகி குளிரில் நனைந்து போயிருந்தன. விரித்த துணிகள் மீண்டும் குளிரத் தொடங்கியிருந்தன.



இவங்கள் எங்கையாவது ஒரு ரெஸ்ரோறண்டிலை சாப்பிட்டிட்டுப் போயிருக்கலாம்தானே.

செண்பகக்காவின் புலம்பல் யாருக்கும் கேட்கவில்லை. அது ராசேந்திரத்தாரின் குறட்டை சத்தத்துள் அமிழ்ந்து போனது.



சந்திரவதனா

யேர்மனி10.9.2004



பிரசுரம் - திண்ணை - 29.10.2004