Monday, July 12, 2004

மரணங்கள் முடிவல்ல

சில மணிநேரத்திற்கு முன்பு, என்றைக்குமில்லாத சந்தோசத்துடன் அந்தப் பெரிய நாற்சார வீட்டில் வளைய வந்த மகேஸ்வரி, இப்போதுதான் அவளின் வீட்டுக்குள் இருந்து நடு ரோட்டுக்கு இழுத்துக் கொண்டு வந்து இருத்தப் பட்டாள்.

தெருவிளக்குகள் கூட எரியாத அந்த நடு இரவின் கும்மிருட்டுக்கும் அவளது அன்றைய அசாதாரண சந்தோசத்துக்கும் எந்தவிதமான பொருத்தமும் இல்லாவிட்டாலும், அவளது அன்றைய சந்தோசத்துக்குக் காத்திரமான காரணம் இருந்தது.



இளம் வயதிலேயே நாட்டைக் காக்க என்று வீட்டை விட்டுப் போன அவள் மகன் ராஜன் இப்போது இரண்டு நாட்களுக்கு முன்தான் வெள்ளை என்ற பெயருடன் வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தான்.



கொப்புளிப்பான் அவனில் கொப்புளங்களை அள்ளிப் போட்டதால்தான் நண்பர்கள் அவனைக் கொண்டு வந்து விட்டார்கள்.



பத்து மாதம் சுமந்து பெற்ற மகனை ராஜா போல் அந்த வீட்டில் வளர்ந்தவனை வாடிவதங்கியபடி கண்டதும் மகேசு, சந்தோசம் துன்பம் எல்லாம் கலந்த ஒன்று நெஞ்சிலிருந்து பீறிட்டுக் கண்ணீராய்ப் பாய "பெத்த வயிறு எப்பிடித் துடிக்குதடா....?!" என்றபடி அவனைக் கட்டியணைத்துக் கதறினாள்.



„களத்தில் நின்றபோதும் அம்மா...!, உன்னை ஒரு கணமும் நான் மறக்கவில்லை“ என்று மனதுக்குள் கூறிய படி ராஜனும் மகேஸ்வரியைக் கட்டிப் பிடித்தான். கலங்காத அவன் நெஞ்சும் ஒரு தரம் குலுங்கியது. ஒரு வருடப் பிரிவையும் அதனால் ஏற்பட்ட இதயம் நிறைந்த பாசத்தாகத்தையும் சில நிமிட நேரத் தழுவலில் ஓரளவுக்காவது தீர்த்துக் கொண்டார்கள்.



கொப்புளங்கள் ராஜனின் மேனியில் அள்ளிப் போட்டிருப்பதால்தான் அவனால் இங்கு வரமுடிந்தது என்றாலும், இந்தச்சாட்டிலாவது அவனை அருகிருந்து கவனிக்க முடிந்ததில் மகேஸ்வரிக்குச் சந்தோசமாக இருந்தது. அந்தச் சந்தோசத்தையும் அவளால் முழுமையாக அனுபவிக்க முடியாமல் நெருஞ்சி முள்ளாய் பய நினைவொன்று நெஞ்சத்தில் குத்திக் கொண்டிருந்தது. மூன்று மாதங்களுக்கு முன் வியாபார விடயமாகக் கிளிநொச்சிவரை போன கணவன் சோமசுந்தரம் இன்னும் வந்து சேராததுதான் அவளுக்குள் கலக்கத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இன்று வருவான், நாளை வருவான் என்றெண்ணிக் காத்திருப்பதும், போக்குவரத்து வசதி சரியாக அமையவில்லைப் போலும் என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் கொள்வதுமாயே மூன்று மாதங்கள் ஓடி விட்டன.



இப்போ வராத மகன் வந்து இரண்டு நாட்களாகியும் இந்த மனுசனைக் காணவில்லையே. வந்து மகனைக் கண்டால் எப்படி மகிழ்ந்து போவான். என்ற எண்ணம் ஏக்கமாய் அவளை வதைக்க எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள்;.

பக்கத்துக் கோயில் வைரவரையும், புட்டளைப் பிள்ளையாரையும், மந்திகை அம்மனையும், வல்லிபுர ஆழ்வாரையும் மனதுக்குள் மன்றாடினாள்.



"என்ரை மனுசன் நல்ல படி வந்து சேர்ந்து விடவேண்டும். நான் பட்டுச் சாத்துவேன், பொங்கிப் படைப்பேன்....!" என்றெல்லாம் மனதுக்குள் கடவுள்களுக்கு வாக்குறுதிகொடுத்தாள்.

அவள் மன்றாட்டம் வீண்போகவில்லை. சரியாக மகன் வந்த மூன்றாம் நாள் மாலை, அதுதான் இன்று மாலை சோமுவும் வந்து சேர்ந்து விட்டான்.

மகேஸ்வரியின் மகிழ்வைச் சொல்லவும் வேண்டுமா! அப்படியொரு சந்தோஷத் துள்ளல் அவளிடம்.



நீண்ட மாதங்களின் பின் நிறைவான குடும்பமாய் இருந்ததில் அவள் மனமும் நிறைந்திருந்தது. கணவன் கொண்டு வந்த மரக்கறிகளை மணக்க மணக்கச் சமைத்துப் பரிமாறினாள். சோமுவுக்குக் கூட அவளது குழந்தைத்தனமான சந்தோசத் துள்ளலில் குதூகலம் பிறந்திருந்தது. அவளது மூத்தமகள் கவிதாவும், கடைக்குட்டி தீபிகாவும், களத்திலிருந்து வந்த மகன் ராஜனும் அந்தக் குதூகலத்துக்கு எந்தக் குந்தகமும் வந்து விடாதபடி கூடியிருந்து கதைத்துவிட்டுப் பத்து மணியளவில் படுக்க ஆயத்தமானார்கள்.



அகிம்சையைப் போதித்த காந்தி பிறந்த மண்ணிலிருந்து அமைதி காக்க என்று வந்த இந்தியப்படை தமது சுயரூபத்தைக் காட்டத் தொடங்கியபின் பருத்தித்துறை மக்களைப் பற்றிக் கொண்ட பீதி கிராமக் கோட்டில் வாழ்கின்ற மகேஸ்வரியையும் தொற்றிக்கொள்ளத் தவறவில்லை.



இந்திய இராணுவத்தின் கற்பழிப்புகளும் காட்டுமிராண்டித் தனங்களும் இன்னும் மகேஸ்வரியின் வீடுவரை வரவில்லையென்றாலும் முன்னெச்சரிக்கையாக அவள் கவிதாவையும் தீபிகாவையும் அவர்களின் அறைகளில் படுக்க விடாமல் தனது படுக்கையறையிலேயே படுக்க வைப்பாள். மகன் ராஜனையும் இந்த இரண்டு நாட்களும் தனது பெரிய படுக்கை அறையின் ஒரு மூலையிலேதான் படுக்க வைத்தாள். இன்றும் கொப்பளிப்பான் ஆக்கிரமிப்பு இன்னும் அவனில் இருந்ததால் அவனைக் கைத்தாங்கலாய் பிடித்துக் கூட்டிக்கொண்டு போய் தனது அறையிலேயே படுக்க வைத்தாள்.



சோமு மாங்காய்ப் பூட்டைக் கொண்டுபோய் கேற்றைப் பூட்டுகையில் மெதுவாக வெளியில் ரோட்டையும் எட்டிப்பார்த்தான். வலதுபக்கம் கிராமக்கோட்டுச் சந்தியை நோக்கிய ரோட்டிலும் சரி இடதுபக்கம் பல்லப்பையை நோக்கிய ரோட்டிலும் சரி எந்தவித மனித நடமாட்டமும் தெரியவில்லை. ஊரே அடங்கிப் போயிருந்தது. எந்த வீடுகளிலும் வெளிச்சம் தெரியவில்லை.



பத்து மணிக்கே ஊரடங்கிப் போகும் படியாக நாட்டுக்கு வந்த நிலையை மனதுக்குள் எண்ணி வருந்தியவாறே கேற்றைப் பூட்டிவிட்டு உள்ளே வந்தவன் படுத்கையறைக்குள் புகுந்து கொண்டான்.



மூன்று பிள்ளைகளும் கணவனும் தன் அருகிலேயே இருக்கிறார்கள் என்ற எண்ணம் மகேஸ்வரியின் மனதை நிறைத்திருக்க படுக்கையிலேயே கணவனுடன் நீண்டநேரம் பேசிக் கொண்டிருந்தவள் அப்படியே து}ங்கிவிட்டாள். இரவு பன்னிரண்டு மணியையும் தாண்டிய அந்த அர்த்த ராத்திரியில் கனவுபோல் அந்தச் சத்தம் கேட்டது.



“சோமசுந்தரம்...... சோமசுந்தரம்...... கதவைத்திற“



முதலில், ஏதோ கனவென்றுதான் மகேஸ்வரி நினைத்தாள். கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டபோதுதான் ஆழ்ந்து து}ங்கியிருந்தவள் துடித்துப் பதைத்து எழுந்தாள்.



“மூன்று மாதங்களின் பின் இன்றுதானே என் வீட்டில் என் மனைவி குழந்தைகளுடன் து}ங்குகிறேன.;“ என்ற நிம்மதியுடன் து}ங்கிக் கொண்டிருந்த சோமுவும் திடுக்கிட்டுக் கண்விழித்து, விபரம் புரியாமல் விழித்து, எதுவோ உறைக்க விறைத்துப் போய் விட்டான்.



அது இந்தியப்படைதான். பிறழ்ந்த அவர்களின் தமிழில் புரிந்துகொண்ட சோமுவும் மகேஸ்வரியும் செய்வதறியாது திகைத்தார்கள். தடுமாறினார்கள்.



“சோமசுந்தரம்.....! “

அதட்டலான கூப்பிடுகையில் மீண்டும் அதிர்ந்து பதறினார்கள்.



“டேய் அப்பு எழும்படா. இந்தியன் ஆமி வந்திட்டானடா“

மகேஸ்வரி குரல் எழுப்பிக் கதைக்கவும் முடியாமல் பயத்தில் குரலைத் தனக்குள் அடக்கிக் கிசுகிசுப்பாகத் தழதழத்த குரலில், ராஜனைக் கட்டிப்பிடித்து எழுப்பினாள்.



“சோமசுந்தரம் கதவைத்திற!“

மீண்டும் கர்ணகடுரமாய் ஒலித்த அந்தக்குரல் மகேஸ்வரியினதும் சோமுவினதும் செவிப்பறைகளில் அறைந்தது. இதற்குள் கவிதாவும் தீபிகாவும் உசாராகிவிட கொப்புளிப்பானில் சுருண்டு போயிருந்த ராஜனும் உசாராகிவிட்டான்.



“அப்பு நான் போய் முன் கதவைத் திறக்க முன்னம் நீ பின்பக்கத்தாலை ஓடிப்போயிடடா“

மகேஸ்வரியிடமிருந்து அழுகை பீறிட்டது. ராஜன் மனதளவில் உசாராகி விட்டாலும் கொப்புளிப்பானில் வெந்து துவண்டு போயிருந்த அவனின் உடல் அவன் மனதின் வேகத்துக்கேற்ப இயங்க மறுத்தது.



“தம்பி வா. நான் உன்னைக் கூட்டிக் கொண்டு போய் பின்னுக்கு விடுறன்.“ கவிதா அவனின் கையைப் பிடித்துக் கொண்டு நாற்சார வீட்டின் நடு முற்றத்தில் இறங்கினாள். குரோட்டன்கள், மல்லிகைக்கொடிகள், ரோஜாச்செடிகள் எல்லாம் அவர்கள் இருவரையும் தழுவி, உரசி பின் தவிப்போடு நிற்க அவை பற்றிய எந்த வித பிரக்ஞையும் இல்லாமல் ராஜனும் கவிதாவும் முன்னேறி குசினி விறாந்தையில் ஏறினார்கள்.



கவிதா குசினிக்குப் பக்கத்திலிருந்த பின்பக்கக் கதவை மெதுவாகத் திறக்க ராஜன் எதுவும் தெரியாத கும்மிருட்டில் வெளியில் காலை வைத்தான்.

அவன் கால் நிலத்தில் படமுன்னரே படபடவென்று துப்பாக்கி வேட்டுக்கள் வெடித்தன.



கவிதா வெலவெலத்துப் போனாள். „தம்பி போகாதை இங்காலை வா“ மெல்லிய குரலில் பதைப்புடன் கூப்பிட்டுக் கொண்டு அப்படியே குசினிச் சுவருடன் ஒட்டிக் கொண்டு நின்றாள். அவளுக்கு வெளியில் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை.



இதே நேரம் தயங்கித் தயங்கி முன் கதவைத் திறந்த மகேஸ்வரி வெடிச்சத்தத்தில் அவள் நெஞ்சே அதிர, குளறியடித்துக்கொண்டு, வாசலில் நின்ற அந்தக் கொடிய இந்திய இராணுவத்தைக் கூடக் கண்டு கொள்ளாமல் திரும்பி வீட்டுக்குள் ஓடினாள்.



அவள் இரண்டடிதான் ஓடியிருப்பாள். ஒரு முரட்டுக்கை அவளை முரட்டுத்தனமாக அழுத்திப் பிடித்தது. "இங்கை புலி இருக்குது.“ பார்வையால் அவளை விழுங்கியபடியே அந்த மிருகம் கர்ச்சித்தது. „இல்லை இல்லை“ மகேஸ்வரி நடுங்கியபடி மறுத்தாள். அந்த மிருகம் தன் அழுங்குப் பிடியை சற்றும் தளர்த்தாமல் அவளைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் வீட்டின் முன் நடுரோட்டில் இருத்தியது.



„ஐயோ என்ரை பிள்ளையளும் மனுசனும் உள்ளை“ கதறினாள். அவள் கதறலில் கொஞ்சம் கூடக் கலக்கமடையாத கல்நெஞ்சுக் காரர்களில் ஒருவன் தீபிகாவையும் சோமுவையும் வெளியிலே கூட்டிக் கொண்டு வந்து மகேஸ்வரியின் அருகில் இருத்தி விட்டு அவர்கள் பக்கம் துப்பாக்கியைக் குறிபார்த்து நீட்டியபடி நின்றான்.



சோமுதான் முதலில் கதவைத் திறக்கப் போனவன். மகேஸ்வரிதான் அவனை அனுப்பப் பயந்து அவனை அறையிலேயே இருக்கச் சொல்லி விட்டுத் தான் வந்து கதவைத் திறந்தவள். எப்படியாவது புருசனையும் பிள்ளைகளையும் இவர்கள் கண்ணில் படவிடாது காப்பாற்றி விடலாம் என்றுதான் முதலில் நம்பிக்கையுடன் எண்ணினாள். இப்படி நடுச்சாமத்தில் நடுரோட்டில் இருத்தப் படுவாள் என்று அவள் துளி கூட நினைக்கவில்லை. இதெல்லாம் நியமாக நடக்கிறதா அல்லது கெட்ட கனவா என்று அவளுக்குப் புரியவில்லை.

பின் பக்கம் போன கவிதாவும் ராஜனும் என்ன ஆனார்கள் என்பது கூடத் தெரியவில்லை. ஹஎப்பிடியாவது என்ரை பிள்ளை தப்பியோடியிருப்பான்ஹ

பொங்கி வந்த கண்ணீருக்கு நம்பிக்கை நினைவுகளால் அணை போட்டாள்.



அவள் நெஞ்சைத் துளைப்பது போல் வீட்டுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த துப்பாக்கி வேட்டுக்கள் மௌனமாகி விட்டன. ஆனால் அவளின் சிறு அசைவைக் கூட அவதானித்த படி துப்பாக்கி முனையொனன்று அவளை நோக்கி நீண்டிருந்தது. வீட்டு வாசலில் அருவருத்த முகங்களுடனான இந்தியன் ஆமிகள் காவலுக்கு நிற்க அவர்களுக்குள் முகமூடி போட்ட எட்டப்பன் ஒருவனும் நின்றான்.



„என்ரை பிள்ளையைக் காட்டிக் கொடுக்கவோடா இந்தப் பிசாசுகளைக் கூட்டிக் கொண்டு வந்தனீ? நீ ஒரு தமிழனாய் இருந்து கொண்டு இப்பிடிச் செய்யலாமோடா?....“ மகேஸ்வரிக்கு அவன் நெஞ்சுச் சட்டையைப் பிடித்து இழுத்துக் கேட்க வேண்டும் போல ஒரு வெறி வந்தது.



பிள்ளைகள் இரண்டு பேரும் என்ன ஆனார்கள் என்று தெரியாத பயத்தில் வெறி கோபமாய் மாறி அதைக் கொப்புளிக்க முடியாமல் திணறி அழுகையாய் சிதறியது. நடுரோட்டு என்றும் பாராமல் ரோட்டில் புரண்டு புலம்பினாள்.

கண்ணுக்கெட்டிய தூத்திலிருக்கும் அந்த வைரவர் கோயில் வைரவரையும் புட்டளையிலிருக்கும் புட்டளைப்பிள்ளையாரையும் கூப்பிடக் கூடத் திராணியின்றிப் பிதற்றினாள்.



இதேநேரம் குசினிச் சுவருடன் ஒட்டிக் கொண்டு நின்ற கவிதாவின் கண்கள் அந்த இருட்டிலும் ராஜனைத் தேடின.

„தம்பி தம்பி எங்கையடா நீ “ கிசுகிசுப்பாய்க் கேட்டாள்.



சத்தம் இல்லை.

மெதுவாகச் சுவரோடு ஒட்டியபடியே வாசலை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள். திடீரென்று அவளை „அக்கா.......!“ என்ற படி ராஜன் கட்டிப்பிடித்தான்.



„அக்கா....... தண்ணி......!“

திக்கிய படி அவன் முனகலுடன் கேட்டான். கவிதாவின் நெஞ்சுச் சட்டையின் உள்ளே எதுவோ பிசுபிசுத்தது.



„தம்பி....!“ இறுகக் கட்டிப் பிடித்தாள்.



„அக்கா...தண்ணி...!“

சில முரட்டுக் கைகள் அவர்களை இழுத்துப் பிரித்தன.



„விடு....என்ரை தம்பி“ கவிதா திமிறினாள்.



„தம்பிக்குத் தண்ணி.....“ அவள் முடிக்கு முன்னே இன்னுமொரு முரட்டுக்கை அவளை கைகளால் பிடித்து இழுத்துக்கொண்டு போனது.



„அ..க்..கா!“ மெலிதாக ராஜன் முனகும் ஒலியைத் தொடர்ந்து தொப்பென்று எதுவோ விழுந்த சத்தம் கேட்டது.



இழுத்து வரப்பட்ட கவிதாவும் இப்போது நடுரோட்டில் இருத்தப் பட்டாள்.

இருட்டிலும் அவள் நெஞ்சுச்சட்டை சிவப்பாக இருப்பது தெரிந்தது.

புpசுபிசுத்தது தம்பியின் குருதி என்பது அவளுக்குத் தெளிவாகப்; புரிந்ததும், „தம்பி....!“ குழறிய படி வீட்டை நோக்கி ஓடினாள். மீண்டும் முரட்டுக்கை அவளை இறுகப்பிடித்து இழுத்துக்கொண்டு வந்து நடுவீதியில் இருத்தியது.



நாலுமணி நேரத்துக்கு முன்பு சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கியிருந்த அந்த வீட்டின் குசினி விறாந்தையில், இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த ராஜனை இந்திய இராணுவத்தினர் வெற்றிக்களிப்புடன் தூக்கிக்கொண்டு வெளியில் வந்தனர். ராஜன் கொப்புளிப்பானில் வீட்டுக்கு வந்திருப்பதை மோப்பம் பிடித்து இந்திய இராணுவத்திடம் காட்டிக்கொடுத்த அந்த முகமூடித் தமிழன் அவர்களைப் பின்தொடர...!

சோமு அவர்களிடம் போய் „என்ரை பிள்ளை.....!?“ கேட்டான்.



„நாளைக்கு மந்திகை ஆஸ்பத்திரிக்கு வந்து அவன் புலி எண்டு சொல்லிக் கையெழுத்துப் போட்டிட்:டு எடுத்துக்கொண்டு போ.“ சொல்லிக் கொண்டு போனார்கள் அந்தப் படுபாதகர்கள்.



களத்தில் காவியமாக வேண்டிய ராஜன், எட்டப்பன் வழி வந்த காட்டிக் கொடுப்பவனால், அவன் தவழந்த வீட்டிலேயே உயிரையும் உதிரத்தையும் சிந்திய கொடுமையைத் தாங்க முடியாமல் அந்த வீடே ஆழ்ந்த சோகத்தில் அசாதாரண அமைதியில் மூழ்கிக்கிடக்க, நடைப்பிணங்களாக சோமசுந்தரமும், மகேஸ்வரியும், கவிதாவும், தீபிகாவும் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.



(4.12.1987 அன்று நடந்த உண்மைச்சம்பவம் இது.)

இயற்பெயர்-விஸ்ணுபாலன்.

செல்லப்பெயர்-ராஜன்

போராளியாக-றோகன்.




சந்திரவதனா

யேர்மனி

செப்டெம்பர் 1999



பிரசுரம் - ஈழமுரசு(11 - 17 நவம்பர் - 1999)

2 comments:

Anonymous said...

Story was good.If he was allowed to escape he would have killed more indians ( they too have family,kids).
People like this guy have gun and open fire against the army.The IPKF no way know that this kid with lungi,trouser will open fire against them.They can not differentiate civilian and LTTE terrorists.
He looks kid he should have surrendered instead he tried to escape that is a mistake.Indian army would have treated him well considering his age if he was surrendered.After all i am an indian tamil and we all know how to treat fellow humans.And i know that what happened in ealam during IPKF.
You ealam people dont know how to get your rights and secure future.Anyway you lost indian and tamilnadu people goodwill.Let us see how this guy prabakaran will
get you good future.

Anonymous said...

hii