Tuesday, October 19, 2004

எங்கள் ஊர்க் காதல் மட்டுந்தான் ஆழமானதா?

நல்லவர்களும் கெட்டவர்களும் எங்கள் நாட்டில் இருப்பது போலவேதான் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். எல்லோரும் சொல்வது போல எங்கள் ஊர்க்காதல் மட்டுந்தான் ஆழமானதும், மேலைநாட்டுக் காதல் ஆழமற்றதும் என்றில்லை. ஊர்கள் வேறு படலாம். ஆனால் மனிதர்களும், மனங்களும் ஊர்களை வைத்து வேறு படுவதில்லை. அதே போலத்தான் காதலும்.



எமது நாட்டில் காதலிப்பதே உலகமகா குற்றமாகக் கருதப்பட்டு அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளும், தடைகளும் இளையவர்களுக்கு விதிக்கப் படுகின்றன. கட்டுப்பாடுகள் அதிகமாகும் போதுதான் கட்டுமீறும் எண்ணமும், தடைகள் அதிகமாகும் போதுதான் அதைத் தாண்ட வேண்டுமென்ற தீவிரமும் ஏற்படுகின்றன. இந்த நிலையில்தான் பின் விளைவுகள் பற்றிய சிந்தனைகளெதுவுமின்றி காதலே வாழ்க்கை என்றாகிறது. எதிர்ப்புக்களை உடைத்தெறிய மனம் துணிந்து, அவசரக் கல்யாணமும் நடந்து விடுகிறது.



மேலைநாட்டுக் காதல் அப்படியில்லை. காதலுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. ஆதலால் கள்ளமாக காதலிக்க வேண்டிய அவசியமோ, ஓடிப் போக வேண்டிய அவசியமோ இல்லை. காதல்தான் வாழ்க்கை என்றில்லாமல், அதற்காகப் போராட வேண்டிய அவசியமுமில்லாமல், காதல் ஒரு புறமும், அதை விட முக்கியமான கல்வி மறுபுறமுமாக வாழ்க்கை ஓடுகிறது. அவசரக் கல்யாணங்கள் அவசியமற்றதாகிறது.



இவைகளை வைத்துக் கொண்டு எங்கள் ஊர்க்காதல்தான் ஆழமானதென்று சொல்லி விட முடியாது. எங்கள் ஊரிலும் காதலிப்பதாக நடித்து ஏமாற்றியவர்களும் இருக்கிறார்கள். மேலை நாடுகளிலும் காதலைப் புனிதமாக நினைப்பவர்களும், ஆழமாகக் காதலிப்பவர்களும் இருக்கிறார்கள்.



அதே போலத்தான் திருமணமானவர்களும். வாழ்க்கை என்று வரும் போது, சேர்ந்து வாழ்கையில் கணவன் மனைவியருக்கிடையில் கருத்து வேறுபாடுகளும் அவரவர் விட்டுக் கொடுக்கும் தன்மை, சகிப்புத்தன்மை என்பவற்றிற்கேற்ப மனவிரிசல்களும் ஏற்படலாம். இந்த விரிசல்கள் வெளிநாட்டவர்களுக்கு மட்டுந்தான் ஏற்படும். எம்நாட்டவர்க்கு ஏற்படாதென்று சொல்லி விட முடியாது. வெளிநாட்டவர்கள் மத்தியில், மனவிரிசல்கள் ஏற்படும் பட்சத்தில், அவர்கள் பிரிந்து போய் விடுவதற்கு ஏதுவாக சட்டங்களும், வாழ்க்கை வசதிகளும் கை கொடுத்து விடுகின்றன. எமது நாட்டில் மனவிரிசல்கள் ஏற்பட்டாலும் பிரிந்து போய் விட முடியாத படி சமூகம், கலாசாரம், பண்பாடு போன்ற சில சாமாச்சாரங்கள் தடுத்து விடுகின்றன. இதனால் எங்கள் ஊர்க்காதல் ஆழமானது என்று சொல்லி விட முடியாது.



அத்தோடு இன்றைய நிலையில் எத்தனையோ மேலைத்தேயப் பெண்கள் எங்கள் நாட்டு ஆண்கள் மேல் காதல் கொண்டு சேர்ந்து வாழ்ந்து பிள்ளைகளையும் பெற்ற பின்னர், எமது நாட்டு ஆண்களால் கைவிடப்பட்டும் இருக்கிறார்கள். ஆழமான காதல் கொண்ட எமது நாட்டு ஆண்கள்தான் இந்த அநியாயத்தைச் செய்திருக்கிறார்கள். அதற்காக அந்த ஐரோப்பியப் பெண்கள் காதல் தோல்வி என்று சொல்லி எமது ஊர்ப் பெண்களைப் போல தற்கொலை வரை செல்வதில்லை. தமக்கென இன்னொரு துணையைத் தேடத்தான் முயற்சிக்கிறார்கள். அதை வைத்து அவர்கள் காதல் ஆழமற்றது என்று சொல்லி விட முடியாது. அவர்கள் மனதிலிருக்கும் அந்தக் காதல் வேதனை வடுவாக மாற அவர்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். சும்மா மேலோட்டமாகப் பார்த்து எங்கள் ஊர்க்காதல் ஆழமானதென்று சொல்லி விட முடியாது.



முதலாவதாகக் கட்டுப்பாடுகளும், தடைகளுமே எங்கள் ஊர்க்காதலை தீவிரமாக்குகின்றன. இரண்டாவதாக சமூகம், கலாசாரம், பண்பாடு போன்ற சில சமாச்சாரங்கள் எங்கள் காதல் ஆழமானதென்று பொய் சொல்ல வைக்கின்றன. அதற்காக எமது காதலெல்லாம் பொய் என்று சொல்ல வரவில்லை. ஆழமான காதலுடன் வாழும் எம்மவர்கள் போலவே ஆழமான காதலுடன் வாழும் வெளிநாட்டவரும் இருக்கிறார்கள். காதல் எல்லோருக்கும் பொதுவானது. நாட்டை வைத்து அது மாறாது.

No comments: