Saturday, May 24, 2008

நினைவு நதியிலிருந்து ஒரு துளி

நினைவு நதியிலிருந்து ஒரு துளி
(1997 ம் ஆண்டு கார்த்திகை மாதம்,
உயிரோடு போராடிக் கொண்டிருந்த எனது அப்பாவைச் சந்திக்க வவுனியா சென்றிருந்த போது)

போர்வையை இழுத்து இழுத்துப் போர்த்திய போதும் நுளம்பு என்னைச் சுற்றிச் சுற்றிக் குத்திக் கொண்டே இருந்தது. ஏற்கெனவே காற்றைக் கிழித்து இரவின் நிசப்தத்தைக் குலைத்துக் கொண்டு செல்லும் ஷெல்கள் எங்கே இந்த யன்னலைப் பிளந்து கொண்டு வந்து என் தலையைப் பதம் பார்த்து விடுமோ என்ற அச்சம் என்னைத் தூங்க விடாது தடுத்துக் கொண்டிருந்தது. நுளம்பு வேறு தொல்லையாய்..!

நுளம்புத் திரி எரிந்து கொண்டுதானிருந்தது. நுளம்பும் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தது. எனக்குத் தனது கட்டிலைத் தந்து விட்டு கீழே பாயில் படுத்திருக்கும் சர்மிளா நித்திரையிலும் காலை இழுத்து இழுத்துச் சொறிந்து கொண்டிருந்தாள். அவளது அம்மா புவனாவுக்கு நுளம்பே குத்தவில்லையோ? குறட்டைச் சத்தத்துடன் ஆழ்ந்து உறங்கியிருந்தாள். எப்படித்தான் அவளால் இப்படி உறங்க முடிகிறதோ? ஷெல்லும், நுளம்பும் இவளை ஒன்றுமே செய்யவில்லையோ!

எனது கண்கள் அறையின் இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்துக்குப் பழகிப் போய் விட்டதால் அறையை வடிவாகப் பார்க்க முடிந்தது. ஐந்து அறைகளும் குசினியும் கொண்ட இந்த வீட்டில் இதுதான் பெரிய அறை. ஈழத்தின் பல்வேறு திக்குகளிலிருந்தும் புலம்பெயர்ந்த ஐந்து குடும்பங்கள் இங்கு வசிக்கிறார்கள்.

பக்கத்து அறையில்தான் அம்மாவும், அப்பாவும். அது ஒரு குச்சியறை. அதையே அம்மாவின் சேலையைத் திரைச்சீலையாக்கி இரண்டாகப் பிரித்து, பின்பக்கம் உடுப்பு மாற்றுமிடமும், சமையலறையும் ஆக்கி முன்பக்கம் கட்டில், மேசை, இரண்டு கதிரைகள். கால் வைக்க இடமில்லை. மூன்று பேர் நிற்கலாம். மூன்றாவது நபர் படுக்க இடமில்லை.

அம்மாவும், அப்பாவும் புவனாவுடன் கதைத்து நான் படுப்பதற்கு அவளின் அறையை ஒழுங்கு செய்திருந்தார்கள்.

'நான் கீழே பாயில் படுக்கிறேன்' என்று எவ்வளவோ சொல்லிப் பார்ததேன்.

'என்ன சொல்லுறிங்கள்? ஜேர்மனியிலை இருந்து வந்து, இங்கை பாயிலை படுக்கப் போறிங்களோ?' புவனா ஒரேயடியாக மறுத்து என்னைக் கட்டிலில் விட்டு விட்டாள். உணவுவிடுதிகளும், பிற்சேரியாக்களும்... என்று எம்மவர் வெளிநாடுகளில் படும் பாடுகள் பற்றிச் சொன்னால் இவர்கள் புரிந்து கொள்வார்களா?

எனக்குக் கட்டிலைத் தந்து விட்டு புவனாவும், சர்மிளாவும் கீழே பாயில் படுத்திருப்பது எனக்கு சங்கடத்தையே தந்தது. புவனாவுக்கு என் வயதுதான் இருக்கும் போலிருந்தது. சுவரெல்லாம் படங்கள் கொழுவியிருந்தன. அவள், அவளது கணவன், சர்மிளா மூவரும் சேர்ந்த படங்கள்தான் நிறையத் தெரிந்தன. தெரியாத முகங்களுடனும் சில படங்களில் புவனா சிரித்தாள். படத்தில் பொட்டும், நீண்ட கூந்தலுமாய் அழகாகத் தெரிந்த புவனா இப்போது குட்டையாக வெட்டிய கூந்தலுடன், பொட்டின்றி ஆனால் கலகலப்பாய் இருந்தாள்.

அறைக்குள் முழுக்க முழுக்க வெளிநாட்டு வாடையுடனான பொருட்கள். கணவர் வெளிநாட்டில் என்றால் தலையையும் குட்டையாக வெட்ட வேணுமா? எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

மீண்டும் காற்றைக் கிழித்த ஷெல் ஒன்றில் வெலவெலத்து நினைவுகளைக் கலைய விட்டேன். ´ஜேர்மனியில் விட்டு வந்த எனது கணவர், குழந்தைகளிடம் உயிரோடு திரும்பிப் போய்ச் சேருவேனா?´ பயத்தில் கலங்கினேன்.

காற்றைக் கிழிக்கும் ஷெல், என் குருதியின் சுவை கண்டு என்னையே சுற்றிச் சுற்றி ரீங்கரிக்கும் நுளம்பு, இரண்டுமே என் தூக்கத்தோடு சவால் விட்டும் எப்போது தூங்கினேனோ தெரியவில்லை. தூங்கி விட்டேன்.

´சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ரோங்கா...´ வர்த்தக சேவை இனிமையாக இசைக்க, சர்மிளா அதை மீறிய சத்தத்துடன் பாடிக் கொண்டு உள்ளே நுழைந்த போதுதான் நான் விழித்துக் கொண்டேன். சர்மிளாவினதும், புவனாவினதும் பாய்கள் மூலையில் சுருட்டி வைக்கப் பட்டிருந்தன. சுவர் மணிக்கூடு 7.30 காட்டியது.

'குட்மோர்னிங், சங்கவியக்கா. நித்திரையைக் குழப்பிப் போட்டனோ?' சங்கடத்துடன் கேட்டாள் சர்மிளா.

குளித்திருந்தாள். நெற்றியிலும், காதடியிலும் சுருண்டிருந்த கேசங்களில் ஒட்டியிருந்த தண்ணீர் சொட்டுச் சொட்டாகச் சிந்த அவள் முகம் பளிச்சென்றிருந்தது. வெள்ளைச் சட்டை அவளை இன்னும் அழகாகக் காட்டியது. பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாகியிருந்தாள்.

'குட்மோர்னிங், சர்மிளா. 7.30 ஆகீட்டுது. நானும் இனி எழும்பத்தானே வேணும்.'

ஜேர்மனியின் நேரமும், தாயக நேரமும் மாறியது மட்டுமல்லாமல் தாயகத்தின் அசாதாரண நிலையும் சேர்ந்து நான் நன்றாகக் குழம்பித்தான் போயிருந்தேன். தூக்கமும் நேரம் மாறித்தான் என்னைத் தொட்டிருந்தது.

வாரிச் சுருட்டிக் கொண்டு நான் எழும்பிய போது புவனா வெளிர்நீலச் சேலைக்கு வெளிர் நீல மேற்சட்டை அணிந்து கொண்டு அறையினுள் நுழைந்தாள். பார்க்கவே ஆசையாக இருந்தது. மருத்துவ விடுதியில் தாதியாக வேலை செய்கிறாளாம். அதனால்தான் வெளிர்நீல ஆடைகள்.
சேலைக்கு அவள் உடம்பு மிகவும் அழகாக இருந்தது. நீண்ட கூந்தல் என் நினைவுகளில் மிதக்க அறையை விட்டு வெளியில் வந்தேன்.

அப்பாவும், அம்மாவும் தேநீர் அருந்தியபடி எனக்காகக் காத்திருந்தார்கள்.
'என்ன பிள்ளை, நல்லா நித்திரை கொண்டியே?' அப்பா வாஞ்சையுடன் கேட்டார்.

'ஓமப்பா நித்திரை கொண்டனான்தான். ஆனால் ஒரே நுளம்பு. ஷெல் வேறை.'

முற்றத்து ரோஜாக்களும், குரோட்டன்களும், கண்ணுக்குக் குளிர்ச்சி தர, மல்லிகை மணம் மனசையே மணக்க வைக்க, கதைத்த படியே வீதியை நோக்கினேன். வவுனியாவின் வைரவர் புளியங்குள ஸ்ரேசன் ரோட் காலைப்பொழுதுக்கே உரிய சுறுசுறுப்புடன் களை கட்டியிருந்தது. வெள்ளைச் சட்டை அணிந்த இளஞ்சிட்டுகளும், சிறார்களும் கதைத்தபடி, சிரித்தபடி பாடசாலைக்கு விரைந்து கொண்டிருந்தார்கள். முதல்நாள் இரவு பெரிய சத்தங்களைத் தொடர்ந்து பறந்த வாழை மொத்திகள் போன்ற ஷெல்களைப் பற்றியோ, அவை எங்கெங்கு வீழ்ந்து வெடித்தன என்பது பற்றியோ அவர்கள் பேசிக் கொண்டதாகத் தெரியவில்லை. முதலிலேயே பேசி முடித்திருப்பார்களோ? அல்லது ஷெல்களும், சாவுகளும் அவர்களுக்கு சாதாரணமாகி விட்டனவோ? கூட்டிய குப்பைகளைக் கொட்ட வந்த நடுத்தர வயதான பெண்மணிகளும், ஒரு சில ஆண்களும்தான் இவைபற்றி ஆங்காங்கு நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

சர்மிளா ஒற்றைப் பின்னலை இரட்டைப் பின்னலாகப் பின்னிக் கட்டிக் கொண்டு சைக்கிளில் இருந்த படியே 'போட்டு வாறன் அக்கா' என்றாள். மாலையில் அவள் காதில் தொங்கிய தொங்குட்டானகளை இப்போது காணவில்லை. பூந்தோட்டம் பள்ளிக்கூடத்தில் படிக்கிறாளாம். எந்த ஆடம்பரங்களுக்கும் அங்கு இடமில்லையாம்.

வலது பக்கம் திரும்பினால் குருமன் காட்டுச் சந்தியில் நிற்கின்ற இராணுவத்தினரின் தரிசனம் கிடைக்கும். அவள் இடது பக்கமாகச் சைக்கிளைத் திருப்பி உழக்கினாள். 12வயதுதான் என்று சொல்ல முடியாத அளவுக்கு பருவம் அவளைத் தாராளமாக வளர்த்திருந்தது.

அவள் போகவும் பேப்பர்காரன் வந்தான். தினமுரசு, ராணி, தென்செய்தி, மித்திரன் நான்கையும் அப்பாவிடம் கொடுத்துச் சென்றான். பங்கர் சண்டைகள், பறக்கும் ஷெல்கள், பாயும் அணிகள், புலிகளுக்கு பிரேமா தூது, பூந்தோட்டப் பள்ளிக் கூடத்தில் இருந்து விசாரணையின் பேரில் மாணவி கடத்தல், கண்டி வீதியில் கட்டித் தொங்க விடப்பட்ட நிலையில் மரணித்திருந்த இளைஞன், முச்சக்கர வண்டி கவிண்டதில் ஸ்தலத்திலேயே மரணித்த சாரதி.. என்ற தலைப்புச் செய்திகளுடன் அஜீத்தின் சினிமாப் பிரவேசம் பற்றியும் பத்திரிகைகள் பறைசாற்றின.

வாசித்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து வந்து சில வீடுகள் தள்ளி குடு;ம்பத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இமானுவெல், தான் இன்று மதியச் சாப்பாடு கொண்டு வருவதாக நேற்றே சொல்லியிருந்தாராம். மணக்க மணக்க கோழிக்கறியும், கத்தரிக்காய் வெள்ளைக்கறியும், முருங்கைக்காய் பிரட்டலும், சம்பாஅரிசிச் சோறும் கொண்டு வந்தார். குருமன் காட்டுச் சந்திப்பக்கம் போகாமல் பிள்ளையார் கோயில் பின்பக்கக் காணிக்குள்ளால் வருவதாகச் சொன்னார்.

கருவேப்பிலை கமகமக்க, மதிய உணவு சுவைத்தது. ஜேர்மனியில் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்திருக்கும் கோழிகளையே சமைத்துச் சுவைத்த நாவும், வாயும் ஊர்க்கோழியின் சுவையில் சப்புக் கொட்டின.

ஜேர்மனியில் இருந்து வந்திருக்கிறேன் என்றதில் அங்கிருந்த ஒவ்வொரு குடும்பமும் முறை வைத்து சாப்பாடு கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். பாதிக்கப்பட்ட புலம்பெயர் தமிழர்கள் என்ற ஒரு உறவைத் தவிர வேறு எந்த சொந்தமும் இல்லாத அவர்களது உறவுப் பிணைப்பும், உதவும் மனப்பாங்கும் என்னை நெகிழவும், மகிழவும் வைத்தன.

சாப்பாடு முடித்து இமானுவெலோடு கதைத்துக் கொண்டிருக்கும் போது நான்கு வீடு தள்ளியிருக்கும் வேதாரணியம் ஐயாவும் எங்களுடன் வந்து இணைந்து கொண்டார். வற்றாப்பளையிலிருந்து புலம் பெயர்ந்து வந்தவராம். சிறிது நேரத்தில் இந்த வீட்டிலேயே குடியிருக்கும் கருணா அன்ரியும் எங்களுடன் இணைந்து கொண்டார். அவரும் யாழ்ப்பாணம்தான். இரண்டு வருடங்களின் முன் 1995இல் தாண்டிக்குளம் தாண்டும் போது கணவர் தவறி விட்டாராம். இதுவரை எந்தத் தகவலுமே இல்லையாம். உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பது கூடத் தெரியாதாம்.

1996 ஆம் ஆண்டு,செப்டெம்பர் 7ஆம் திகதி க.பொ.த (உயர்தரம்) பரீட்சை முடிந்து பாடசாலையிலிருந்து சைக்கிளில் வீடுநோக்கிச் சென்று கொண்டிருந்த பொழுது யாழ்ப்பாணம்-கண்டி வீதியில் செம்மணி காவலரண் அருகில் சோதனை என்ற பெயரில் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பட்டுப் பின்னர் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி கருணா அன்ரியின் சொந்தகாரப் பிள்ளையாம். நடந்து முடிந்த அந்தக் கொடுமையை மீண்டும் ஒரு முறை அவர் விபரித்தார். கண்களில் நீர் கோர்த்தது. தொட்டுத் தாவிய கதைகள் உணவு போலச் சுவைக்கவில்லை. மனதைச் சுமையாக அழுத்தின.

கதைகள் முடிந்து ஆளாளுக்கு அந்த இடத்தை விட்டுக் கலைந்த போது நேரம் மதியத்தைத் தாண்டியிருநந்தது. அந்தப் பொழுதில் திடீரென்று ஒரு வாகனம் வீட்டு வாசலில் வந்து நின்றது. பூந்தோட்டம் பாடசாலையில் இருந்து வந்து புவனாவைத் தேடினார்கள். புவனா வேலை செய்யும் இடத்தை அப்பா சொல்ல அவசரமாகத் திரும்பினார்கள்.

ஒரு மணி நேரம் சென்றிருக்கலாம். மீண்டும் அந்த வாகனம் வந்து நிற்க புவனா வந்திறங்கினாள். கூடவே சர்மிளா வந்தாள். கொஞ்சம் அசௌகரியமான உணர்வுகள் கலந்த முகத்தில் வேதனை ரேகைகளும் படிந்திருந்தன.

சர்மிளா பெரிய பிள்ளiயாகி விட்டாளாம். அம்மா, அப்பாவும், கருணா அன்ரியும் சந்தோசப் பட்டார்கள். பிள்ளையைக் குளிக்க வாருங்கோ என்றார்கள்.

புவனாவின் முகத்தில் சந்தோசமே இல்லை, வழமையான கலகலப்பையும் காணவில்லை. எதையோ பறிகொடுத்தவள் போலத் தவித்தாள். அம்மாவைக் கூப்பிட்டு பின்வளவுக்குள் இருக்கும் கிணற்றடியில் வைத்து சர்மிளாவுக்குத் தண்ணீர் வார்த்தாள். 'அப்பா இல்லாத இந்தப் பிள்ளையை எப்பிடிப் பாதுகாக்கப் போகிறேன்' என்று முனகினாள்.

'அப்பா இல்லாத..?' சட்டென்று விளைந்த ஆச்சரியத்தோடு நிமிர்ந்தேன் நான்.

„ம்.. மதவாச்சியில் எப்போதோ வெட்டிப் பிளக்கப் பட்டு விட்டார்.' கருணா அன்ரிதான் அவசரமாய்ச் சொன்னார்.

'கிருஷாந்திக்கு நடந்தது தெரியுந்தானே. அதுதான் நெஞ்சு பதறுது' என்றாள் புவனா.

தொடர்ந்த நாட்களில் சர்மிளா பெரியபிள்ளையாகி விட்டதை யாரும் யாருக்கும் சொல்லவில்லை. வீட்டுக்கு வருவோர் போவோருக்கெல்லாம் அவளுக்கு நல்ல காய்ச்சல் என்றுதான் புவனா சொல்லிக் கொண்டிருந்தாள். என்னையும் அப்படித்தான் சொல்லச் சொன்னாள். சிலரை சர்மிளாவுக்கு மலேரியாக் காய்ச்சல் போல இருக்கிறது என்றும் நெருப்புக் காய்ச்சல் போல இருக்கிறது என்றும் சொல்லி வீட்டு வாசலையே மிதிக்க விடாமல் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தாள். தொலைத்தொடர்பு நிலையத்துக்குச் சென்று சவுதியில் இருக்கும் தனது தம்பிக்கு மட்டும் விடயத்தைச் சொல்லி வந்தாள். புவனா சில சமயங்களில் புதிராகவே இருந்தாள். சில இரவுகளில் காணாமல் போயிருந்தாள்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடம் அது. பாஸ், அனுமதி... என்று பல கெடுபிடிகள். ஆனாலும் இடையிடையே எழிலன் என்றொரு இளைஞன் அம்மா, அப்பாவிடம் வந்து போய்க் கொண்டிருந்தான். அவனை மருமகன் என்று தான் அம்மாவும், அப்பாவும் மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தி வைத்திருந்தார்கள். அறைக்குள் நின்று கதைக்கும் போதுதான் அவனது இடுப்பின் இருபக்கங்களிலும்; சொருகியிருந்த கைத்துப்பாக்கிகளும், கழுத்தில் தொங்கிய சயனைட்டும் அவனை எனக்கு இனம் காட்டின.

சில நாட்களில் அந்த வீடும், வாசலும், வீதியும் ஓரளவு எனக்குப் பழக்கமாகியிருந்தன. பயம் இருந்தாலும் அந்த வீட்டு வளவுக்குள் அனிச்சையாகத் சுற்றித் திரியத் தொடங்கியிருந்தேன். காய்த்துக் குலுங்கும் முருங்கை மரங்களும், குலை இறக்கியிருக்கும் வாழை மரங்களும்.. பூக்களும், செடிகளும், விதம்விதமான குரோட்டன்களும்... என்று வளவு முழுக்க செழித்திருந்தன. பகலில் வெயிலும், மாலையில் சொல்லி வைத்தாற் போல் பெய்யும் மழையும்தான் வளவு நிறைந்த மரங்களின் மதாளிப்பிற்குக் காரணமாக இருக்க வேண்டும்.

இயற்கையோடு இசைந்து, அந்த ரம்மியமான சூழலோடு நான் இணைந்திருந்த ஒரு மாலைப்பொழுதில் சிந்தனைகளைச் சிதறடித்து, உணர்வுகளை உறைய வைக்கும் படியாக திடீரென்று ஒரு பாரிய சத்தம். தொடர்ந்து துப்பாக்கி வேட்டுக்கள். சைக்கிள்களும், ஓட்டோக்களும் அசுர வேகத்தில் எதிரும் புதிருமாகப் பறந்தன. கூடவே 'கண்டி றோட்டில் இராணுவ வாகனத்துக்கு மேல் ஆரோ குண்டு வீசி விட்டார்கள் ' என்ற செய்தி பறந்து பரவிக் கொண்டிருந்தது.

எழிலனின் சைக்கிள் வந்த வேகத்தில் ரயர் நிலத்தோடு தேய வீட்டு வாசலில் நின்றது. ஓடி வந்து கதிரையில் அமர்ந்து அவசரமாக தினமுரசைப் படிக்கத் தொடங்கினான். இல்லை படிப்பது போலப் பாசாங்கு செய்தான். அவனுக்கு மூச்சு வாங்கியது.

'நீதானே எறிஞ்சிட்டு வந்திருக்கிறாய்?' அப்பாதான் கேட்டார்.

அவன் அர்த்தமான முறுவலோடு அப்பாவைப் பார்த்து விட்டு கண்களைத் தாழ்த்திக் கொண்டான். அவன் தினமுரசைப் படிக்கவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.

திடீரென்று கருணா அன்ரி ஓடி வந்து 'தம்பி...! வாறாங்கள்' என்றார். மின்னல் வேகம் என்பதை அப்போதுதான் பார்த்தேன். ஒற்றைச் செருப்பு சரியாகக் காலுக்குள் கொழுவுப் படவில்லை. இழுத்துக் கொண்டு ஓடியவன் குருமன் காட்டுச் சந்திக்கு எதிர்ப்பக்கமாக சைக்கிளில் பறந்து விட்டான்.

கண் மூடி முழிக்க முன் வைரவர் புளியங்குள ஸ்ரேசன் றோட் இராணுவத்தின் பூட்ஸ் கால்களுக்குள் மிதிபட்டது. வீட்டைச் சுற்றிலும் துப்பாக்கிகள் ஏந்திய இராணுவம். வீட்டுக்குள் ஓவ்வொரு அறையும் கிண்டிக் கிளறித் தேடப் பட்டன. . சர்மிளா அர்த்தத்தோடு பார்க்கப் பட்டாள். பின்னர் கைகளால் தடவியும் பார்க்கப் பட்டாள். அம்மா, அப்பாவின் குச்சியறைக்குள் நான்கு பேர் புகுந்து நாசம் பண்ணினார்கள். சாப்பாடுகளைக் கூடத் திறந்து கிண்டினார்கள்.

என்னை அவர்கள் கேள்விக் குறியோடு பார்த்தார்கள். மரணப் படுக்கையில் இருந்த அப்பா சிங்களத்தில் ஏதோ சொல்ல ஒவ்வொருவராக அறையை விட்டு வெளியில் போய்க் கொண்டிருந்தார்கள்.. பக்கத்து வீடுகளுக்குள்ளும் பாய்ந்து தேடினார்கள்.

தேடுதல் வேட்டை முடிந்து அவர்கள் போனபின் எல்லாம் அமைதியாயிற்று. அப்பாவும், அம்மாவும் பெருமூச்சு விட்டு தம்மை ஆசுவாசப் படுத்திக் கொண்டார்கள். அப்போதுதான் கவனித்தேன். கேற்றுக்குப் போகும் வழியில் எழிலனின் ஒற்றைச் செருப்பு கவிழ்ந்து வீழ்ந்திருந்தது.

எழிலன் பிடிபட்டிருப்பானோ? நான் தவித்தேன்.

„அவனை இவங்கள் எங்கை பிடிக்கிறது! அவன் ஓடித் தப்பியிருப்பான்.' அப்பா உறுதியாகச் சொன்னார்.

சந்திரவதனா
ஜேர்மனி
24.5.2008

No comments: