Thursday, March 31, 2005

தகைமை

ஏதாவது அதிசயம் நிகழ்ந்து, தபாற்பெட்டியினுள் பணத்தோடு கடிதமோ அல்லது பணம் வென்றிருப்பதாய் கடிதமோ வந்திருக்காதோ என மைதிலியின் மனம் அவாப்பட்டது. அவ்வளவு பணமுடை மைதிலிக்கு.

சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். "யேர்மனிக்கு வந்து எவ்வளவு காலம். புருசனும், பெண்சாதியுமாக ஓடி ஓடி உழைக்கினம். எங்கை போகுது காசெல்லாம்..?" என்று ஒரு சாராரும், "அவையிட்டை நல்ல காசிருக்கும்...!" என்று இன்னொரு சாராரும் பேசிக் கொள்வார்கள்.

மைதிலிக்குத்தான் தெரியும் அவள் படும்பாடு. முகுந்தன் வேலை செய்வதோடு சரி. அவனது சம்பளம் வங்கிக்கு வரும். அதனுடன் தனது கடமை முடிந்து விட்டதாக அவன் நினைப்பு. கொஞ்சம் கொஞ்சமாகப் பொறுப்புகளெல்லாம் மைதிலியின் தலையில் பெரும் சுமைகளாகி விட்டன. பணமுடை வரும் போதெல்லாம் "என்னப்பா செய்யிறீர்..? நானும் மாடு மாதிரி உழைச்சுக் கொண்டு வந்து போடுறன். நீர் சும்மா செலவழிச்சுப் போட்டு இருக்கிறீர். என்னை அழிக்கிறதுக்கெண்டே வந்திருக்கிறீர்." முகுந்தன் கத்துவான்.

மைதிலி என்ன செய்வாள். எப்படித்தான் கணக்குப் போட்டுப் பார்த்தாலும் முகுந்தனின் உழைப்பு, வீட்டு வாடகை, மின்சாரம், காப்புறுதிகள்..., முகுந்தன் வாங்கிய புதுக்காருக்கான கட்டுக்காசு... போன்றவைகளுக்கே காணாது. மைதிலியின் சம்பளத்திலும் மாதாமாதம் கொஞ்சம் போட்டால்தான் வங்கி நிலை ஓரளவுக்காவது சரிவரும்.

ஆரம்பத்தில் திட்டமிட்டதென்னவோ மைதிலியின் சம்பளம் சாப்பாட்டுச் செலவுகளுக்கும், பிள்ளைகளின் பாடசாலை, உடுப்புச் செலவுகளுக்குமென்றுதான். ஆனால் முகுந்தனிடம் மெது மெதுவாகத் தலை காட்டத் தொடங்கிய டாம்பீகம், புதுக்கார்.. புதிய தளபாடங்கள்... என்றானதில் செலவுகள் கட்டுக்கடங்க மறுத்தன. இருந்தாலும் மைதிலி இரண்டு வேலைகள் செய்து, வரும் தனது இரு சம்பளத்தையும் சேர்த்து ஒருமாதிரி இதுவரை சமாளித்து வந்தாள்.

ஆனால் இந்த யூரோவும் வந்த பின், மார்க்கில் இருந்த சம்பளம் யூரோவாகிய போது சம்பளம் எண்ணிக்கையில் அரைவாசியானது. பொருட்களின் விலைகள் மட்டும் அப்படியே மார்க் என்பது யூரோ என்று மட்டும் மாற்றப் பட்டன. சம்பளத்தோடு பார்க்கும் போது பொருட்களின் விலைகளெல்லாம் உச்சமாக இருந்ததால், மைதிலியால் செலவுகளை ஒரு வழிக்கும் சமாளிக்க முடியாமல் போகத் தொடங்கியது. இந்த நிலை மைதிலிக்கு மட்டுமல்ல. அனேகமான நடுத்தர வர்க்கக் குடும்பத்தவர் எல்லோருக்கும்தான்.

ஆனாலும் யாரும் மைதிலியிடம் பணமில்லை என்பதை நம்பத் தயாராக இல்லை. ஊரவர்தான் புரிந்து கொள்ளவில்லையென்றால் உற்றவனும் கூடப் புரிந்து கொள்வதில்லை. புரிந்துணர்வில்லாது அவனுள்ளிருந்து எழும் சினங்களும், கோபங்களும் மைதிலியை பணமுடைக்கு மேலால் மனமுடைய வைத்தன.

அதிகமான பெரிய செலவுகள் முகுந்தனாலும், பிள்ளைகளாலும்தான் என்றாலும் பணப்பற்றாக்குறைக்கான காரணி மைதிலி என்பது போலத்தான் வீட்டுக்குள் எப்போதும் குத்தல் கதைகளும், எரிச்சல்களும்.. அதனோடு கூடிய சண்டைகளும் எழுந்தன.

வங்கியில் பணமில்லாத காரணத்தால் திருப்பப்படும் கணக்குகளை, தண்டனைப் பணத்துடன் கட்ட மைதிலி மெதுமெதுவாகக் கடன் படத் தொடங்கினாள். இப்போ கடனும் முட்டி விட்டது. வங்கியும் நெருக்குகிறது. முகுந்தன் கத்துகிறான்.

அதுதான் மைதிலி வேலை தேடுகிறாள். என்ன... வேலை..? பெரிதாய் ஒன்றும் இல்லை. அவள் திறமைக்கோ, தகைமைக்கோ ஏற்றதாய் எதுவும் கிடைக்க வாய்ப்பில்லை. ஏற்கெனவே இரண்டு வேலைகள் செய்வதால் மூன்றாவது வேலையையும் பதிந்து செய்வதில் அர்த்தமும் இல்லை. அறாவரி கட்டுவதிலேயே ஒரு சம்பளம் போய்விடும். பதியாமல் கள்ளமாக வேலை செய்யவதென்றால், ஆண்களுக்குக் கைகொடுப்பது உணவுவிடுதிகளும், பிற்சேரியாக்களும் என்றால், பெண்களுக்கோ வீடுகள் மட்டுந்தான். வீடுகளைத் துப்பரவாக்கிக் கொடுக்கும் Putzen (புட்ற்சன்) வேலையை விட்டால் வேறு எதுவும் பெரிதாக யேர்மனியில் இல்லை.

ஊரில் வேலைக்காரர்களை வைத்து வேலை வாங்கிக் கொண்டு வாழ்ந்து பழகிய தமிழ்ப் பெண்களில் பலர் இங்கு யேர்மனியில் யேர்மனியரின் வீடுகளில் அவர்களது மலசலகூடங்களைக் கழுவி, படுக்கையை விரித்து, குளியலறைகளைக் கழுவி, சட்டி பானைகளை மினுக்கி... வேறு வழிகள் அவர்களுக்குத் தெரியவில்லை. ஆரம்பத்தில் இதை யாரும் செய்வினையோ..! என்று முகம் சுளித்த மைதிலியும் இப்போ அதையே தேடத் தொடங்கி விட்டாள். இதற்குக் கூட நேர்முகப் பரீட்சை நடப்பதுதான் தவிர்க்க முடியாதது.

மைதிலி செய்தித்தாள்களில் வேலை தேடி, அவர்களுடன் தொலைபேசி.. நேரம் குறித்து இப்போ நூற்றுக்கு மேற்பட்ட நேர்முகப் பரீட்சைகளில் தோற்றி விட்டாள். நடந்து நடந்து கால்கள்தான் ஓய்ந்தனவே தவிர வேலை இன்னும் கிடைக்கவில்லை. அவர்கள் எதிர் பார்த்த தகைமைகளில் அவளுக்கு பாடசாலைக்குச் செல்லும் வயதில் பிள்ளைகள் இருப்பதுவும், ஏற்கெனவே இரண்டு வேலைகள் செய்வதுவும் பெரும் குறையாக இருந்தன.

பல தடவைகள் அலைந்து உலைந்து பின் ஏமாறுவதில் இனி வேலை தேடுவதில்லை என்று சபதம் எடுப்பாள். அவள் என்ன கதைகளில் வரும் திரெளபதியா..? கூந்தலை அள்ளி முடித்துச் சபதம் எடுக்க..! வங்கியிலிருந்து திரும்பும் காசோலையும், முகுந்தனின் சினப்பும் போதும் அவள் சபதம் தவிடு பொடியாக.

நேற்றும் காலையே தினசரிப்பத்திரிகையைப் பார்த்து அதிகாலையே தொலைபேசி, நேரங் குறித்து அந்த வீட்டுக்கு நடந்தே போயிருந்தாள். பேரூந்தில் போயிருப்பாள். அந்தப் பக்கத்துக்கான பேரூந்து ஓட்டம் சற்று நீண்ட நேர இடைவெளிகளோடு என்பதால் நடந்தாள்.

குறித்த நேரத்துக்கு டாண்.. என்று அவள் அழைப்பு மணியை அழுத்திய போது அந்த வீட்டு யேர்மனியப் பெண் கதவைத் திறந்து விட்டு வியந்து நின்றாள். "நீ ஒரு வெளிநாட்டுக்காரி. இத்தனை கச்சிதமாக குறித்த நேரத்துக்கு வந்து நிற்கிறாய்" என்று பாராட்டினாள். தன்னை "ரெகினா" என்று அறிமுகப் படுத்தினாள்.

வீடு நான்கு மாடிகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மாடியும் விஸ்தாரமானதாய் இருந்தன. ரெகினா ஒவ்வொரு அறையாகக் காட்டிய போது ஒவ்வொரு மாடியிலுமிருந்த மலசலகூடங்களும், குளியலறைகளும், படுக்கையறைகளினுள்ளான படுக்கைகளும் மைதிலியின் மனதை மலைக்க வைத்தன. எப்படி மூன்று மணித்தியாலங்களுக்குள் நான்கு மாடிகளையும் துப்பரவாக்கி முடிப்பது என்று பயமாகக் கூட இருந்தது. ஆனாலும் அவள் அதை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. கொஞ்சக்காலத்துக்காவது செய்து பணப்பிரச்சனையைத் தீர்த்தால் போதும் என்று மனசு கணக்குப் போட்டது. ஒவ்வொரு நாளும் மூன்று மணித்தியாலங்கள் என்னும் போது ஒருவாறு செய்து முடித்து விடலாம் என்ற நம்பிக்கையும் ஒரு புறமிருந்தது.

ஆனாலும் ஏற்கெனவே இரண்டு வேலைகளுடன், வீட்டு வேலைகளையும் செய்து முடிக்கவே அவளுக்கு போதும் போதுமென்றிருக்கும். இப்போ இந்த வேலையுமென்றால் பிள்ளைகளைக் கூடச் சரியாகக் கவனிக்க முடியாது போகலாம். மனதுக்குள் சங்கடமாகத்தான் இருந்தது. சில காலத்துககுச் செய்து விட்டு, பிறகு இந்த வேலையை விட்டு விடலாம். எண்ணிக் கொண்டாள்.

"நான் ஒண்டுமே சொல்ல மாட்டன். என்ன செய்யோணுமெண்டு நீயே பார்த்து அதுகளைச் செய்யோணும். ஒரு மாதத்துக்கு ஒருக்கால் எல்லா யன்னல் கண்ணாடியளையும் கழுவிப் போடோணும். 3 மாதத்துக்கு ஒருக்கால் யன்னல் சீலைகளையெல்லாம் நீயே கழற்றி வோசிங்மெசினில் போட்டு எடுத்து திரும்பவும் கொழுவீடோணும். குசினி அலுமாரியள் எல்லாத்தையும் கிழமைக்கொருக்கால் பழிச்செண்டு துடைச்சு விடோணும். புத்தகங்களை நான் எடுத்து வாசிச்சுப் போட்டு அப்பிடி இப்பிடி எங்கையாவது வைப்பன். நீ அதுகளைப் பார்த்து எடுத்து, சரியான இடங்களிலை அடுக்கி வைக்கோணும். புத்தகங்களிலையோ, புத்தக அலுமாரிகளிலையோ தூசி கொஞ்சமும் இருக்கக் கூடாது. அதிலை நீ கவனமாக இருக்கோணும். அடிக்கடி பார்த்துத் துடைச்சுப் போடோணும்." ரெகினா சொல்லிக் கொண்டே நடந்தாள்.

அங்கிருந்த புத்தக இறாக்கைகளும் அலுமாரிகளும், மட்டும் மைதிலியை வெகுவாகக் கவர்ந்தன. புத்தகங்களைக் பார்க்கும் போது மைதிலியின் கண்களில் தெறித்த ஆர்வத்தை ரெகினாவும் கண்டிருக்க வேண்டும்.

"உனக்கு புத்தகங்கள் என்றால் பிடிக்குமோ..? வாசிப்பியோ..? " உடனேயே கேட்டும் விட்டாள்.

"ஓம் ஓம் எனக்கு நல்லாப் பிடிக்கும்."

ரெகினா சில புத்தகங்களை இறாக்கையில் இருந்து இழுத்து மேசையில் போட்டாள். ஒரு புத்தக அட்டை அழகும் அமைதியும் குடிகொண்ட இந்திரா காந்தியின் முகத்துடன். மற்றது வாலில் நெருப்பு எரிய அனுமாருடன்...

"இதெல்லாம் வாசிப்பியோ..?" வியப்புடன் மைதிலி வினாவினாள்.

"ம்.. ம். நான் பல தடவைகள் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் போயிருக்கிறன்."

ரெகினா வீட்டின் ஒவ்வொரு பகுதியாகக் காட்டிக் கொண்டு போகும் போது தனது வாழ்க்கையின் சில பகுதிகளையும் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளது கணவன் கடந்த வருடம் ஒரு கார் விபத்தில் இறந்து விட்டாராம். அவளுக்கு வயது ஐம்பதாம். பார்த்தால் நாற்பது, நாற்பத்தைந்துதான் மதிக்கலாம். தற்போது தன்னை விட ஐந்து வருடங்கள் இளைய ஒரு நண்பனுடன் வாழ்கிறாளாம். பிள்ளைகள் எல்லாம் தனித்தனியே வெவ்வேறு நகரங்களில் குடியேறி குடும்பம் குழந்தை என்று வாழ்கிறார்களாம். அவர்கள் இங்கு இவளைப் பார்க்க என்று வரும் போது தங்க இடம் வேணுமென்றுதான் இத்தனை பெரிய வீட்டை வைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கிறாளாம்.

அறிமுகம் எல்லாம் முடிய "சரி.. இன்னும் 29 பெண்கள் நேர்முகப் பரீட்சைக்கு வருவார்கள். எழுபது பேர் மட்டிலை தொலைபேசியிலை அழைத்தார்கள். அவர்களிலை 30 பேரைத்தான் அழைச்சனான். நீதான் முதல் ஆள். நாளைக்குக் காலைமை எட்டு மணிக்கு முடிவு சொல்லுறன்" என்று சொல்லி வழியனுப்பி வைத்தாள்.

மைதிலிக்கு அந்த வீட்டுக்குள் குவிந்திருக்கும் வேலையை நினைத்து மலைப்பாக இருந்தாலும் மாதம் மாதம் கிடைக்கப் போகும் 400யூரோவின் அவசியம் அதிகமாக இருந்தது. வீட்டுக்குள் இருந்த ஏதோ ஒன்று அந்த வேலை கட்டாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஊட்டியது.

அந்த நம்பிக்கையோடுதான் அன்றைய தூக்கம். தூக்கத்தில், சின்னவன் சயந்தன் கேட்ட அடிடாஸ் சப்பாத்தை வாங்கிக் கொடுப்பது போலவும், பெரியவனின் பள்ளிக்கூட ரூறுக்கு அனுமதி வழங்குவது போலவும், அரவிந்தன் சினப்பை மறந்து சிரித்துச் சந்தோசமாகக் கதைப்பது போலவும் ஏதேதோ இனிய கனவுகள். ஒருவித சந்தோசமான எதிர்பார்ப்புடன்தான் அவளது இன்றைய பொழுது விடிந்தது. ரெகினா கதைத்ததை நினைத்துப் பார்க்கையில் கண்டிப்பாக வேலை கிடைக்கும் போலவே இருந்தது.

எட்டுமணிக்கு எதிர்பார்த்தபடி தொலைபேசி அழைத்தது. "மைதிலி உன்னை எனக்கு நல்லாப் பிடிச்சுது. ஆனாலும் நான் வேறையொரு பெண்ணை வேலைக்கு எடுத்திட்டன். புத்தகங்களைப் பார்க்கிற பொழுது உன்ரை கண்களிலை தெரியிற ஒளியும், காணுற புத்தகத்தையெல்லாம் சடாரென்று வாசிக்கத் தொடங்கிற உன்ரை ஆர்வமும்.... நீ புட்ற்சனுக்கு ஏற்ற பெண்ணில்லையென்று எனக்கு உடனையே தெரிய வைச்சிட்டுது. உனக்கு வேறையேதும் நல்ல வேலைதான் சரி. வேணுமெண்டால் நீ அடிக்கடி என்ரை வீட்டுக்கு வா. இந்தப் புத்தகங்களிலை விருப்பமானதை எடுத்துக் கொண்டு போய் வாசி...." அதற்கு மேல் மைதிலிக்கு அவள் சொன்னவை எதுவும் காதில் விழவில்லை.

நம்பிக்கைகள் மீண்டும் தவிடு பொடியாகின. வாசிப்பின் மீதான ஆர்வம் கூட இப்போது புட்ற்சன் செய்வதற்கு இருக்க வேண்டிய தகைமைகளில் மூன்றாவது குறையாக.. அவளைக் கலங்க வைக்க, ஏதாவது அதிசயம் நிகழ்ந்து, தபாற்பெட்டியினுள் பணத்தோடு கடிதமோ அல்லது பணம் வென்றிருப்பதாய் கடிதமோ வந்திருக்காதா என்ற அங்கலாய்ப்போடு தபாற்பெட்டியைத் திறந்தாள்.

வீட்டுவாடகை கட்டுப்படாததற்கான கண்டனக் கடிதம் எச்சரிக்கைப் பணத்தோடு சேர்த்துக் கணக்குப் போட்டு வந்திருந்தது.

சந்திரவதனா
யேர்மனி
19.8.2004

No comments: