தை -2002
(ஒரு பார்வை)
பூவரசு என்றதும் மனதுக்குள் மின்னலிடும் நினைவுகள்தான் எத்தனை! இலையைச் சுருட்டி பீப்பி ஊதியதும், பம்பரக் காய் சுற்றியதும் மட்டும் அல்லாமல் மரங்களின் வட்டுக்குள் அப்பியிருந்த மயிர்க்கொட்டிகள் கூட ஞாபகத்தில் வந்து ஒரு தரம் மயிர்க்கூச்செறிய வைக்கின்றன. இவை மட்டுந்தானா..? எமக்குள்ளே உறங்கியும் உறங்காமலும் ஒளிந்திருக்கும் ஊரின் நினைவுகள் கூட ஒரு தரம் மீட்டப்பட்டு ராகமிசைக்கின்றன. அந்த சந்தோசத்துடனேயே நான் என்னை வந்தடைந்த பூவரசின் பக்கங்களைப் பக்குவமாகப் புரட்டத் தொடங்கினேன்.
நெற்றி வியர்வையைத் துடைத்த படி வேலை செய்யும் வேட்டியைத் தாறுபாய்ச்சிக் கட்டிய சிறுவர்களின் அழகிய கோலமும், பனைமரமும் முன் அட்டையை அழகு படுத்த பூவரசு தனது பதினொரு வருடப் பயணத்தை இனிதே நிறைத்திருந்தது.
1991 இல் தமிழ் வானொலிகளோ தொலைக்காட்சிகளோ இல்லாத ஐரோப்பிய மண்ணில் துளிர்த்த சஞ்சிகைதான் பூவரசு. காலத்தின் ஓட்டத்தில் எதிலும் ஒட்ட முடியாத புலம்பெயர் தமிழர்களின் பல்வேறு பட்ட பிரச்சனைகளின் மத்தியில் துளிர்த்த வேகத்திலேயே கருகிக் காணாமற் போன சஞ்சிகைகள் பல. இவைகளின் மத்தியில் பூவரசு 11 ஆண்டுகளை நிறைத்திருக்கிறது என்றால் நாம் முதலில் பூவரசு சஞ்சிகை ஆசிரியர் இந்துமகேஷ் அவர்களைத்தான் பாராட்ட வேண்டும்.
திரு இந்துமகேஷ் அவர்கள் தாயகத்திலேயே எழுத்துலகுக்கு மிகவும் பரிச்சயமானவர். இவரின் முதல் வீரகேசரிப் பிரசுரமான ஒரு விலை மகளைக் காதலித்தேன் என்ற குறநாவலை எழுத்துலகம் அத்தனை விரைவாக மறந்திருக்காது. அந்நாவல் அந்த நேரம் பலரைக் கவர்ந்தது மட்டுமல்லாமல் மிகுந்த சர்ச்சைக்கும் உள்ளானது யாவரும் அறிந்ததே.
எனக்குத் தெரிந்த வரையில் இவரது குறுநாவல்கள் பல வீரகேசரிப் பிரசுரங்களாக வெளிவந்துள்ளன. அதைவிட நாடக உலகிலும் இவர் கால் பதிக்கத் தவறவில்லை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ரூபவாகினி போன்றவற்றிலும் இவரது நாடகங்கள் அரங்கேறி இருக்கின்றன. சங்கிலியன் மன்ற நாடகக் குழுவுடனும் இவர் நாடகங்களை அரங்கேற்றி இருக்கின்றார்.
தற்போது, புலத்திலும் பூவரசு தவிர்ந்த வேறு பத்திரிகைகளிலும் இவரது ஆக்கங்களைக் காண முடிகிறது. அதை விட பாடல்கள் எழுதி அதற்கு இசை வடிவம் கொடுப்பித்து ஒலி இழைப் பேழைகளிலும் பதிவாக்கியிருக்கிறார்.
இவர் கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதற்கு இவைகள் சான்றாயுள்ளன. அதனால்தான் அவரால் ஒரு சஞ்சிகையை இவ்வளவு மனஉறுதியுடன் 11 வருடகாலம் நடாத்த முடிந்திருக்கிறது.
சஞ்சிகையின் தரம் வளர்ந்து கொண்டே வருகிறது. புலம்பெயர்மண்ணில் பல எழுத்தாளர்களை உருவாக்கிய வளர்த்து விட்ட பெருமை, பல் வேறுபட்ட நாடுகளிலும் வாசகர்களைக் கொண்ட இந்தப் பூவரசுக்கு இருக்கிறது.
இன்னுமொரு குறிப்பிடப் பட வேண்டிய விடயம், வருடந்தோறும் எழுத்தாளர்களுககு உற்சாகமூட்டக் கூடிய வகையில் சிறுகதை, கவிதை, கட்டுரைப் போட்டிகள், என்று நடாத்தி வளரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்க
பூவரசு தவறுவதில்லை.
அந்த வகையில் 11 வது வருடத்தை நிறைத்த இந்தப் பூவரசும் போட்டி முடிவுகளைத் தெரிவித்துக் கலைஞர்களையும் கௌரவித்திருக்கிறது.
சஞ்சிகையை நடாத்துவது மட்டுமல்லாமல் அதன் ஒவ்வொரு வருட நிறைவையும் ஒரு விழாவாகக் கொண்டாடி எழுதுபவர்களை மட்டுமல்லாமல் மற்றைய கலைத்துறைகளில் உள்ளவர்களுக்கும் சந்தர்ப்பங்களைக் கொடுத்து ஊக்குவித்து பிறேமனையே ஒரு தமிழர்களின் கலைத்துறை சார்ந்த இடமாக்கிய பெருமை பூவரசு ஆசிரியருக்கு உண்டு.
இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், ஜேர்மனியின் பிறேமன் நகரில் வாழும் எம்மவர்களில் ஒருவரான ஒளிப்பதிவாளர் திரு பத்மகரன் அவர்கள் இம்முறைப் பூவரசில் கௌரவிக்கப் பட்டுள்ளார். இது மிகவும் வரவேற்கத் தக்க விடயம்.
எம்மவர் ஒருவர் திரைப்படத் துறையில் ஆர்வம் கொண்டு அதைக் கற்று நினைவுமுகம் என்ற தமிழ் திரைப்படத்துக்கு படப்பிடிப்பாளராக செயற்பட்டது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அதுமட்டுமா யேர்மனியின் தொலைக்காட்சியின் ARD யில் தொடர் நாடகங்களிலும் நடித்துள்ளார் எம்மவரான பத்மகரன். பூவரசு அதை எமது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
1992 இல் பூவரசின் 1வது ஆண்டு நிறைவை ஒட்டிய விழாவில், ஒரு தாளலயம் நாடகத்தில நடிக்க கிடைத்த வாய்ப்பே பத்மகரன் இந்தளவு தூரம் வளர்வதற்கு அத்திவாரமாக இருந்திருக்கிறது.
இப்படிப் பல்வேறுபட்ட சிறப்பம்சங்களைத் தன்னகத்தே கொண்ட இம்முறைப் பூவரசிலும் வழக்கம் போலவே கதை, கவிதை, கட்டுரை, சிறுவர்களுக்கான பகுதிகள், அங்கு இங்கு என்று பல இடங்களிலிருந்து பொறுக்கப் பட்ட பயனுள்ள செய்தித் துணுக்குகள், பழமொழிகள், பழங்கதைகள், பயனுள்ள தகவல்கள், கணினி பற்றிய தகவல்கள், "சும்மா" என்று சொல்லி சுவையான விடயங்கள், அப்பாவி அப்பாசாமியின் நாசூக்கான கருத்துப் பரிமாற்றங்கள் என்று பல்வேறுபட்ட விடயங்கள் இடம் பிடித்துள்ளள.
இடப்பற்றாக் குறை காரணமாக வழமையாக இடம் பெறும் சில விடயங்கள் இடம் பெறாதது கவலையே. குறிப்பாக 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனியில் கையெழுத்துப் பிரதியாக வெளிவந்த, புலம்பெயர்ந்தவர்களின் தவிப்பையும் கூடவே அவர்களை விட்டகலாத தாயக நினைவுளுடனான வாழ்வையும் மொத்தத்தில் புலத்தையும் தாயகத்தையும் தனக்குள்ளே கொண்ட மிகவும் சிறப்பான தொடராக வந்து கொண்டிருந்த, விடியலுக்கில்லை தூரம் என்ற குறுநவீனம இம்முறை சஞ்சிகையில் இடம் பெறாதது சற்று ஏமாற்றமே.
நா. தேவதாசனின் குறள் கவிதைகள் சுவையானவை. அவையும் இம்முறை இடம் பெறத் தவறிவிட்டன.
ஆனால் உலகப் பல்கலைக் கழகத்தின் The Cultural Doctorate in Philosophy of Literature என்ற உயர் விருதினைப் பெற்ற மதுரகவி திரு.கந்தவனம் அவர்களின் திறமையை வாசகர்களுடன் பகிர்ந்து பெருமை கொள்ளவும் பூவரசு தவறவில்லை.
பூவரசின் ஆசிரியர் இந்து மகேஸ் அவர்கள் தனது உரையில் இப்படிச் சொல்கிறார்.
"அந்நிய மண்ணுக்கு நாங்கள் அகதிகளாகப் புலம் பெயர்ந்த அந்த ஆரம்பஇப்படித் தொடர்கிறார்.
காலங்களில் நமது வாழ்வின் தேவைகளுக்கான தேடுதல்களோடு, நம்மை நாம் முகம் தொலைத்து விடாதிருக்க, நம்மை நமது வாழ்வை அர்த்தப்படும் விதமாக செயலப்ட்டாக வேண்டிய நிலையில் கலை இலக்கியங்களைக் கரம் பற்றிக் கொண்டோம்.
இந்தக் கலைஇலக்கிய வெளிப்பாடுகளின் ஒரு அம்சமாக முகிழ்த்தன சஞ்சிகைகள். ஒன்று, பத்து, நூறு... என அவை எண்ணிக்கையிலும் பெருகின. இவை வடிவமைப்புக்களில் ஒத்த தன்மைகளைக் கொண்டிருந்த போதும் அவை தாங்கி வரும் படைப்புகளில் படைப்புக்களின் கருத்துக்களில் வித்தியாசப் பட்டிருந்தன.
பத்தாண்டுகளுக்கு முன்பு ஒருவித உத்வேகம் கொண்டு வெளிப்பட்ட பல்வேறு சஞ்சிகைளில் பெரும்பாலானவை இன்று "இல்லை" என்றான போதும் அவற்றின் சமூக கலை இலக்கியப் பணிகளை வாசகர்கள் மறந்து விடுவதற்கில்லை.
எந்த ஒரு சஞ்சிகையும் நெடுங்காலம் நிலைத்து நிற்பதற்கு அதன் அடித்தளம் பலமாக இருக்க வேண்டும் என்ற நியதிக்குக் கட்டுப் பட்டு தொடங்கப் பட்டவைகள் மிகக் குறைவே...."
ஆனால் பூவரசு தனது அடித்தளத்தை பலமாகக் கொண்டே தொடங்கப் பட்டிருக்கிறது என்பதை நாம் பூவரசின் 11 வது ஆண்டு கால வளர்ச்சியில் கண்டு கொண்டோம்.
அதன் கலை இலக்கியப்பணி தொடர எம்மாலான பங்கைச் செய்து அதன்
வளர்ச்சிக்கு வாழ்த்துவோம்.
சந்திரவதனா
யேர்மனி
இம்முறை பூவரசு நடாத்திய போட்டிகளில் பரிசு பெற்றோர் விபரம்:
சிறுகதை
முதல் இடம் - சந்திரவதனா செல்வகுமாரன் - ஜேர்மனி
இரண்டாவது இடம் - சாந்தினி வரதராஜன் - ஜேர்மனி
மூன்றாவது இடம் - நளாயினி தாமரைச்செல்வன் - சுவிஸ்
கட்டுரை
முதல் இடம் - த. பவானந்தன் - யேர்மனி
இரண்டாவது இடம் - ஏ. ஜே. ஞானேந்திரன் - சுவிஸ்
மூன்றாவது இடம் - சுயித்ரா தருமசீலன் - ஜேர்மனி
கவிதை - முதல் இடம் - நா. தேவதாசன் - ஜேர்மனி
இரண்டாவது இடம் - சக்திதேவி - சத்தியநாதன் - ஜேர்மனி
மூன்றாவது இடம் - அம்பலவன் - புவனேந்திரன் - ஜேர்மனி
மேலும் இம்முறை பூவரசில் ஆக்கங்களைத் தந்தோர் விபரம்-
ஜேர்மனியிலிருந்து:
த.சு.மணியம்,
திரு.திருமதி.ஜோர்ஜ்,
அம்பலவன்.புவனேந்திரன்,
இ.சம்பந்தன்,
சக்திபாலா,
கொற்றையூர்வாசன்
மாலினி. குணராஜன்
எழிலன்
நா.தேவதாசன்
ப.இராஜகாந்தன்
வீ.ஆர்.வரதராஜா
கே.என்.குணராஜன்
அமலன்
சாந்தினி வரதராஜன்
த.பவானந்தராஜா
பொ.கருணாகரமூர்த்தி
பகீரதி சுதேந்திரன்
செல்வா
ரவி செல்லத்துரை
புஸ்பராணி ஜோர்ஜ்
சில்லையூர் சிங்கராஜர்
அப்பாவி அப்புசாமி
டென்மார்க்கிலிருந்து:
வேலணையூர் பொன்னண்ணா
இலண்டனிலிருந்து:
கு.விக்னேஸ்வரன்
அவுஸ்திரேலியாவிலிருந்து:
ராஜி. வல்லிபுரநாதன்
சந்திரவதனா செல்வகுமாரன்
ஜேர்மனி
2002
No comments:
Post a Comment